சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து துறைரீதியான மானிய கோரிக்கைகளை அமைச்சர்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்திய பின்னர், அமைச்சர்கள் பதிலும் அளிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்தார். இதன் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். நிறைவாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக திருமண திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை,"என்றார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், "அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக எந்த ஒரு திருமணத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று அமைச்சர் கூறியது உண்மைக்கு மாறான செய்தி. அதிமுக ஆட்சியின் போது முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 1008 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எந்த திருமணத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் கூறியதை ஏற்க முடியாது,"என்றார்.
இதையும் படிங்க: கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரம்... அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாஜக கண்டனம்!
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சேகர்பாபு, ஆர்.பி. உதயகுமாரை பார்த்து குறிப்பிட்ட சில வார்த்தை கூறி விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் அமர வேண்டும். அவையில் பேசும் போது சபாநாயகர் இருக்கையை பார்த்துப் பேச வேண்டும்,"என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், "ஆளும் கட்சியாக இருக்கும் போது அவர்களும் (அதிமுக) திருமண நிகழ்வுகளை நடத்தி வைத்திருப்பார்கள். நாமும் (திமுக) அறநிலையத்துறை சார்பில் திருமணங்கள் நடத்தியுள்ளோம். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்,"என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "நான் பேசியதை அதிமுக உறுப்பினர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள்,"என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஆர்.பி.உதயகுமார்,"அமைச்சர் என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார். அதற்கு பதில் அளிக்க என்னை சபாநாயகர் அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், சபாநாயகர் அப்பாவு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, அமைச்சர் சேகர்பாபு பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்