திருச்சி: திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கு முதற்கட்டமாக இடத்தை சர்வே எடுப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே. என். நேரு கூறியுள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ரூ.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று (மே.17) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திருச்சி மாரீஸ் மேம்பாலப் பணிகள் ரயில்வே நிர்வாகத்தால் கால தாமதம் ஆகி வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
ரயில்வே நிர்வாகம் 6 மாதத்திற்குள் முடித்து தருவதாக கூறியுள்ளது. அதே போல, ஜங்சன் அரிஸ்டோ மேம்பாலப் பணிகளும் விரைவில் முடிவடையும். மெட்ரோ ரயில் சேவை கோயம்புத்தூர் மற்றும் மதுரையிலும் அமைய உள்ளன. திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை வழங்குவதற்கு இடத்தை சர்வே எடுப்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளனர்.
திருச்சி ஜங்சன் பகுதியிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை (elevated highway) அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மத்திய அரசு ஆறு வழிச் சாலையாக பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை அமைப்பதற்கும், கரூர் சாலையில் இருந்து துவாக்குடி வரை நான்கு வழிச் சாலை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றது” என்றார்.
தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பாஜக கூட்டணியை போல, இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை எனக் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இருக்கிறதா? இல்லையா? என ப.சிதம்பரத்திடம் நேரில் கேளுங்கள்” என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.