வேலூர்: வேலூர் மாவட்டம், சேவூரில் 6.32 கோடி மதிப்பீட்டில் காங்கேயநல்லூரிலிருந்து அம்முண்டி வரையில் கால்வாயை அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா இன்று (ஏப்ரல் 20) நடைபெற்றது.
இதில் மாநில நீர் வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்து மக்களுக்காக அர்பணித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், '' மழைக்காலங்களில் பாலாற்றில் வரும் தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வருங்காலங்களில் தொடர்ந்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் '' பொன்னை ஆற்றில் 48 கோடி ரூபாய் மதிப்பில் ஆங்காங்கே சிறு, சிறு அணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கும். இதன் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்'' என தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், 'மேகதாது அணையை கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனை ரத்து செய்ய தமிழக அரசு ஏன் கோரவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: குடிநீரில் கலந்த கழிவுநீர்? சிறுமி உள்பட இருவர் உயிரிழப்பு; மேயரின் விளக்கம் கேட்டு 'அதிர்ந்த மக்கள்'!
'அது பெரிய பிரச்சனை'
அதற்கு பதிலளித்த அமைச்சர், '' கர்நாடகா அரசு பணம் கட்டி திட்ட மதிப்பீடு தயாரிக்கின்றனர். அதனால் நமக்கு என்ன பயன்?. ஏற்கனவே மத்திய அரசு மேகதாதுவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டது. சுற்றுச்சூழல் வாரியமும், மத்திய நீர் வளத்துறையும் அனுமதியை வழங்கவில்லை. தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது. அது பெரிய பிரச்சனை'' என கூறினார்.
தொடர்ந்து மேகதாது விவகாரத்திற்கும், முல்லை பெரியாறு விவகாரத்திற்கும் ஒரு கண்டன தீர்மானம் கூட கொண்டு வரவில்லையே என எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, '' இந்த வழக்கில் தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. நாங்கள் ஏன் கண்டன தீர்மானம் கொண்டு வரவேண்டுமென கூறினார்.
நீட் விவகாரத்தில் அதிமுக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கேள்விக்கு, நீட் விவகாரம் குறித்து அதிமுகவிற்கு தைரியம் இருந்தால் சட்டசபையில் பேசட்டும் என கூறினார்.
மேலும், 2026 இல் இறைவன் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, சிரித்தபடி, ''ஐயோ பாவம்'' என பதிலளித்து சென்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்