நாகப்பட்டினம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில் அரசின் சார்பாக மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்தின் கீழ் பொன்னி சித்திரை கடல் என்ற ஓவிய பயிற்சி மையம் திறக்கப்பட்டது. தற்போது இந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் பயன் பெற்று வருக்கின்றனர்.
இந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதால், மாணவர்களின் நலனுக்காக பனை ஓலை மற்றும் கீற்றுக் கொட்டகையிலான கூடுதல் ஓவிய பயிற்சி கூடங்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஏப்ரல் 19) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, ''பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் வஞ்சிக்கப்படுவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அதிமுகவில் 50 ஆண்டுகளாக பயணித்த இஸ்லாமியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழக முதல்வரை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினர் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருப்பதை வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்பது திமுக மட்டுமே. இஸ்லாமியர்கள் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போதைய வக்ஃப் திருத்த சட்டத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினராக நியமித்து இஸ்லாமியர்களிடம் வம்பிழுக்கும் வேலையை பாஜக செய்கிறது. அண்ணன், தம்பி உறவுகளான எங்களிடம் பிரிவினைவாதத்தை பாஜக உண்டாக்குகிறது.
நாகை மாவட்டத்தில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மறியல் போராட்டங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஊழல் கொடி பறக்க யார் காரணம்? ஜெயக்குமார் பேச்சால் பரபரப்பு!
அதனை தொடர்ந்து நாகை பொது அலுவலக சாலையில் திமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது கடும் வெயிலில் வந்த பொது மக்களுக்கு நுங்கு, இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சு, ரோஸ் மில்க், நீர் மோர் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். நாகூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகன ஓட்டிகளுக்கும் திமுகவினர் ஐஸ் மோர் வழங்கினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்