சென்னை: சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஐந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதன் மீது வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தி, விசாரணை இன்று (ஏப்ரல் 23) தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆனால் வழக்கில் முகாந்திரம் இல்லை என்பதால், அதை மதுரை அமர்வு முடித்து வைத்ததாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், முதன்மை அமர்வு மீண்டும் அதே விவகாரத்தை எடுக்க அவசியம் இல்லை. மேலும், அமைச்சரின் முழுமையான பேச்சை கேட்காமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு குறித்து அமைச்சர் உள் அரங்கத்தில் பேசிய விவகாரம் தான் இது என்றும் குறிப்பிட்டார்.
வெறுப்பு பேச்சு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாட்டின் முக்கிய சமயங்களான சைவ மற்றும் வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கள், இரு சமயத்தினரின் மனதையும் புண்படுத்தியுள்ளது.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது. இந்த பேச்சுக்காக அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிஷ்டவசமானது.
இதையும் படிங்க |
வெறுப்பு பேச்சை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அதனைத் தவறாக பயன்படுத்தி இருக்கிறார் எனக் கூறி, வெறுப்பு பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்கை, தகுந்த உத்தரவுகளுக்காக தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.