சென்னை: அம்பேத்கரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா வரும் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 25 பேருக்கு அனுமதி வழங்கக் கோரியும், போதுமான பாதுகாப்பை வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 25 பேருக்கு அனுமதி வழங்கக் கோரி மார்ச் 20ஆம் தேதி காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. அதில், பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, யாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மாட்டோம், அப்பேத்கரின் சிலைக்கு காவி வேட்டி, சத்தன திலகம், விபூதி மற்றும் குங்குமம் அணிய மாட்டோம். மேலும், வாத்தியங்கள் இசைக்க மாட்டோம், போக்குவரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என உத்தரவாதம் அளித்தும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதனால், காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அர்ஜூன் சம்பத் உட்பட 25 பேருக்கு அனுமதி வழங்கினால் பொது அமைதி பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலீஸ், வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு; உயர் நீதிமன்ற விசாரணையில் இன்று என்ன நடந்தது?
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரர் அளித்த உத்தரவாதத்தை ஏற்று, பட்டினப்பாக்கம் காவல்துறை வாகனத்தில் அர்ஜூன் சம்பத் உட்பட 25 பேர் சென்று பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அனுமதி வழங்கினார். மேலும், உத்தரவாதம் மீறப்பட்டால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்