சென்னை: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கடந்த 12 ஆம் தேதி 'கல்விக் கூடங்களில் கம்பர்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி '' கம்பரையும், கம்ப ராமாயணத்தையும் நாம் என்றுமே மறக்கக் கூடாது. அப்படி நாம் மறந்துவிட்டால், அது நமது கலாச்சாரத்தை மறந்து விட்டதற்கு சமம் ஆகும். கம்ப ராமாயணத்தில் குறிப்பாக, பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும்? என கம்பர் கற்றுக் கொடுத்திருக்கிறார்'' என மேடையில் பேசினார்.
அதனை தொடர்ந்து ஆளுநர் தனது உரையை முடிப்பதற்கு முன்பு அங்கிருந்த மாணவர்களிடம், தான் சொல்வதை அப்படியே திருப்பி சொல்லுங்கள் எனக் கூறி விட்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டார். மாணவர்களும் திருப்பி அந்த கோஷத்தை எழுப்பினர். இது தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்லூரியில் மதம் சார்ந்த கோஷத்தை மாணவர்களை எழுப்ப வைத்ததாக ஆளுநருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்களை எழுப்பின.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் '' தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது உரையின் முடிவில் ஜெய் ஸ்ரீராம் என்று மூன்று முறை கூறியதோடு, மாணவர்களையும் கூறுமாறு நிர்ப்பந்திந்துள்ளார். உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இதையும் படிங்க: அம்பேத்கரையும், பெரியாரையும் இழிவுப்படுத்துவதா? பிரகாஷ் அம்பேத்கர் ஆவேசம்!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்டமுன்வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி கொட்டிய பின்பும், அரசியல் சாசனக் கடமைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமிகள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம்மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல்களாகத் திகழ வேண்டிய கல்விக்கூடங்களை காவி கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது.
ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது'' என இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்