சென்னை: பங்குனி மாத பௌர்ணமி, வார இறுதி மற்றும் தமிழ்வருடப்பிறப்பை முன்னிட்டு அரசுப் போக்குவரத்து துறையின் சார்பில், ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் நேற்றைய நிலவரப்படி இன்று அதிகாலை 2.00 மணி வரை 6,049 சிறப்பு பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர். நேற்று (ஏப்ரல் 12) சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணிகள் பெருமளவு அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.
சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு மற்றும் அடையாறு பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலை செல்ல பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பயணிகள் சிரமமின்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பாக இந்த நான்கு பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்ககூடிய 244 பேருந்துகளுடன் கூடுதலாக 504 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 35 சிறப்பு பேருந்துகளும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 82 சிறப்பு பேருந்துகளும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 12 சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன.
குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் வழக்கமாக இயக்கப்படும் 164 பேருந்துகளுடன் 530 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 694 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு மட்டும் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க: |
1. போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் மூணாறில் கைது! |
ஆகமொத்தம் 877 பேருந்துகளில் 52,615 பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர். அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய கண்காணிப்பு உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்வது உறுதி செய்யப்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.