சென்னை: சென்னை ஆர்கே நகரில் கடந்த ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் சகோதரர், சிறுமியை பிளேடால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆர்கே நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி காவல்துறையில் அளித்திருந்த புகாரில், "கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மதன்குமார் என்பவர் என்னை தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்தார்,"என கூறியிருந்தார். சிறுமியின் புகாரின் பேரில் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபர் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதியன்று இரவு 10 மணியளவில் கொருக்குப்பேட்டை சிபி சாலையில் இருந்த சிறுமியை அங்கு வந்த குற்றம் சாட்டப்பட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மதன்குமாரின் சகோதரர் பாபு என்பவர் "என் தம்பி மீது ஏன் வழக்கு கொடுத்தாய்?"என கேட்டபடி தான் வைத்திருந்த பிளேடால் சிறுமியை தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார். அந்த நபரின் தாக்குதலால் சிறுமியின் முகம் மற்றும் மணிக்கட்டு பகுதிகளில் ரத்த காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து தகவலறிந்த ஆர்கே நகர் போலீசார் சிறுமியை பிளேடால் தாக்கிய பாபுவை தேடிவந்தனர். கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியில் பாபு பதுங்கி இருந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்த உடன் பாபு தப்பி ஓடினார். அப்போது அவர் தவறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு பாபுவின் கை முறிவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவருக்கு மாவுக்கட்டுப் போடப்பட்டது. பாபு மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் சகோதரர் சிறுமி மீது பிளேடால் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கும், அவரது குடும்பத்துக்கும் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.