தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பாலசுப்பிரமணியன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன்களும் வெளியூரில் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வளர்மதி நிலத்தின் பத்திரப்பதிவுக்காக வீட்டில் உள்ள நகைகளை அடகு வைப்பதற்காக பீரோவை திறந்து நகையை எடுக்க முயன்றார். அப்போது நகைப்பெட்டியில் இருந்த 58 சவரன் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த வளர்மதி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் பூட்டு உடைக்காமல் - பீரோ கதவுகள் உடைக்காமல், துணிகள் எதுவும் கலையாமல் நகைகள் மட்டும் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 10ந் தேதி புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்குள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் திட்டை பகுதியை சேர்ந்த சுதாகர் (39) என்பவரை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுதாகர் வளர்மதிக்கு உறவினர் ஆவார். மேலும் வளர்மதி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதும், பள்ளிக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை வீட்டின் வெளி பகுதியில் வைத்து செல்வதையும் அறிந்த சுதாகர், ஒரு வார காலமாக வீட்டை நோட்டமிட்டுள்ளார். இதனையடுத்து பகல் வேளையில், சாவியை எடுத்து வீட்டிலிருந்து நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டி அதே இடத்தில் சாவியை வைத்து வந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: தென்பெண்ணை ஆற்றில் என்ன அது? துர்நாற்றத்துடன் காட்சியளிக்கும் அதிர்ச்சி! விவசாயிகள் கவலை!
மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து வளர்மதிக்கு தெரிகிறதா? என கடந்த சில நாட்களாக நகைகளை அவரது வீட்டில் வைத்து விட்டு வளர்மதியை கண்காணித்து வந்துள்ளார். பின்னர் போலீசார் விசாரணையில் வசமாக சிக்கிய சுதாகரிடமிருந்து நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். நகை திருடு போன 8 நாட்களில் விசாரணை நடத்தி திருடியவரை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் செயல்பட்ட போலீசாரை காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் வெகுவாக பாராட்டினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்