சென்னை: சென்னை, வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24) வழக்கம் போல பணிக்கு வந்து நான்காவது பிளாக் கட்டடத்தில் உள்ள லிஃப்டில் அவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது லிஃப்டில் உடன் பயணித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டு லிப்டை நிறுத்தினார். இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூச்சலைக் கண்டு சக பெண் பணியாளர்கள் அந்த நபரை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் நல சங்கத்திடம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சக பணிப்பெண்கள் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்காததால் வானகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலியல் அத்துமீறல் தொடர்பாக லிஃப்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்பு நிர்வாகம் விளக்கம்
இதற்கிடையில், சம்பவம் குறித்து அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள தகவலின்படி, '' இன்று (ஏப்ரல் 24) காலை டி1 பிளாக்கின் லிஃப்டில் பணிப்பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர் தவறாக நடந்து கொண்டுள்ளார். பின்னர் லிஃப்ட் குறிப்பிட்ட மாடியில் நின்ற போது பணிப்பெண் தப்பி ஓடிவந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன் பின்னர் அந்த நபர் பி பிளாக்கின் படிக்கட்டில் வந்த போது குடியிருப்பாளர்கள் மற்றும் பணிப்பெண்களில் ஒருவர் அவரை பிடிக்க முயன்றனர் ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதையும் படிங்க: திடீரென வட்டமடித்த ஹெலிகாப்டர்கள்... காஷ்மீரில் நடந்தது என்ன? தமிழக சுற்றுலா பயணிகள் 'திகில்' பேட்டி!
இந்த சம்பவங்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. குடியிருப்பில் பணிபுரியும் சில பணிப் பெண்கள், அந்த நபர் அடையாளம்பட்டை சேர்ந்தவர் என்றும், அவரைத் தங்களுக்கு தெரியும் என்றும் எங்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வானகரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் விசாரணை நடத்தினர். காவல் உதவி ஆணையரும் எங்கள் வளாகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பாலியல் தொல்லை அளித்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக வானகரம் காவல் நிலைய எஸ்ஐ ரஜீத் தகவல் தெரிவித்துள்ளார்'' என அதில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்