மதுரை: ரயில் பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் லோகோ பைலட்டுகளின் நலன் கருதி பல்வேறு வசதிகளை ரயில்வே துறை செய்து வருகிறது. அந்த வகையில், லோகோ பைலட்டுகளுக்காக 90 சதவீத ரயில் என்ஜின்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், "ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் 'லோகோ பைலட்' என அழைக்கப்படுகின்றனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, ரயில்களை பாதுகாப்பாக இயக்கும் லோகோ பைலட்டுகளுக்கு ரயில்வே துறை சார்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அவர்கள் பணியிடமான என்ஜின்களில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பணி முடிந்தவுடன் நல்ல ஓய்வினை மேற்கொள்ளும் வகையில், முக்கிய ரயில் நிலையங்களில் நவீன வசதிகளுடன் தொழிலாளர் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் 90 சதவீத ரயில்வே எஞ்சின்களில் லோகோ பைலட் அமர்ந்து பணியாற்றும் பகுதி குளிர்சாதன வசதியுடன் உள்ளது. மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மீளவிட்டான், திருச்செந்தூர், காரைக்குடி, செங்கோட்டை, புனலூர், ராமேஸ்வரம், போடிநாயக்கனூர் ஆகிய ரயில் நிலையங்களில் ஓடும் தொழிலாளர் ஓய்வு அறைகள் உள்ளன.
மதுரையில் 48 தனித்தனி அறைகள், திருநெல்வேலி - 50, திண்டுக்கல் - 33, தூத்துக்குடி மற்றும் மீள விட்டானில் தலா - 25, திருச்செந்தூர் - 13, காரைக்குடி - 25, செங்கோட்டை - 19, புனலூர் - 12, போடிநாயக்கனூர் - 9, ராமேஸ்வரம் - 32 என சிறிய தனி அறைகளுடனும், நவீன வசதிகளுடனும் ஓடும் தொழிலாளர் ஒய்வு அறைகள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது ஓய்வு அறைகளில் ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது, களைப்பு ஏற்படாத வகையில் வசதியான இருக்கைகள் இந்திய அளவில் பாதிக்கு மேற்பட்ட என்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளன. புதிதாக தயாரிக்கப்படும் ரயில் எஞ்சின் களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பழைய ரயில் இன்ஜின்களிலும் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் லோகோ பைலட்டுகளின் வேலை நேரத்தை கணிசமாக குறைக்கும் வகையில், முக்கிய ரயில் நிலையங்களில் புதிய ஓய்வு அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும், பனிக்காலத்திற்கான பாதுகாப்பு கருவிகள், ரயில் விபத்தை தவிர்க்கும் 'கவாச்' சாதனம், லோகோ பைலட்டுகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் சாதனங்கள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரயிலை நிறுத்தும் 'பிரேக்' வசதி போன்றவையும் ரயில் என்ஜின்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. லோகோ பைலட்டுகள் எளிதாக பணியாற்றும் வகையில் என்ஜின்களின் நவீன வசதிகள், நவீன தொழில்நுட்பம், உரிய ஓய்வு நேரங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
சரக்கு ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் சரக்கு நிலையங்களில் சிறிது நேரம் நிறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் லோகோ பைலட்டுகள் கழிப்பறை வசதியை பயன்படுத்தவும், உணவு எடுத்துக் கொள்ளவும் வசதியாக அமைகிறது. குறைந்த தூரம் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் பணியாற்றும் லோகோ பைலட்டுகள் ரயில் நிலையங்களில் உள்ள வசதிகளை பயன்படுத்துகின்றனர்.
தற்போது, பயணிகள் ரயில்களில் பணியாற்றும் லோகோ பைலட்டுகள் பெரிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும் போது அந்தந்த ரயில் நிலையங்கள் உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில்வே நிர்வாகம் லோகோ பைலட்டுகளுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.