மதுரை: மதுரை வழக்கறிஞர் சக்தி ராவ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் 2017ஆம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்தேன். முதுகலை சட்டப் படிப்பையும் முடித்திருக்கிறேன். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில் சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான அனைத்து தகுதியும் பெற்றிருந்த நிலையில், உரிய விபரங்களுடன் விண்ணப்பித்திருந்தேன்.
கடந்த 10ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொடர்பான முடிவு வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. உரிமையியல், குற்றவியல், மேல்முறையீட்டு வழக்குகள், சீராய்வு மனுக்கள் என பல்வேறு பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆஜராகி ஏராளமான உத்தரவுகளை பெற்றிருந்தும், நான் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் என்னைவிட அனுபவம் குறைந்த பல நபர்கள், அரசு வழக்கறிஞர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்விற்கான அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு, "இதில் நீதிமன்றம் தலையிட இயலாது. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண்கள் குறித்து அவதூறு கருத்து? புதுக்கோட்டை மருத்துவருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி, "மனுதாரர் அரசு வழக்கறிஞர் பணியிடத்திற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் தேர்வாகாததால் ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்யுமாறு கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல" என தெரிவித்தார்.
இதனையடுத்து மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.