சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு எதிராக மோசடி, ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பில், ''கடந்த 1998 ஆம் ஆண்டு வீடு வாங்கியது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விற்பனை நடந்ததாக கூறப்படும் காலத்தில் மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்ததால், தற்போது வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிக்க சட்டமன்ற சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை.'' என வாதிடப்பட்டது.
மேலும், ''குடியிருப்பை வாங்கியதில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. எந்த மோசடியும் நடைபெறவில்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.'' என்றும் வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை விளக்கி வாதிடப்பட்டது. மேலும், ''குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும்.'' என வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: ''2 ஆண்டுகளுக்கு பிறகு கேள்விக்கு பதில்'' - குறிஞ்சி மலரை ஒப்பிட்டு செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு மீதான உத்தரவை நீதிபதி வேல்முருகன், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (மார்ச் 28) நீதிபதி வேல்முருகன் அளித்த தீர்ப்பில், ''மா. சுப்ரமணியத்தின் மீதான நில அபகரிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அனைத்து நீதிமன்றங்களும் கடுமையான பணிச்சுமையில் இருப்பதால் குறிப்பிட்ட காலத்தில் ஒரு வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என எந்த நீதிமன்றத்துக்கும் கால நிர்ணயம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் இந்த வழக்கில் கால நிர்ணயம் செய்யப்படவில்லை.'' என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.