மதுரை: சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு சட்டப் பாதுகாப்பு இயக்க உறுப்பினர் சதீஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சட்டம் அரசியலமைப்பு அட்டவணையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் தற்போது மக்கள்தொகை அதிகரித்துள்ளதால், சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே இடஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்.
மேலும் பல ஆண்டுகளாக இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டிற்கு ஆதார் எண் ஏன் கட்டாயம்? தமிழ்நாடு அரசு அறிக்கை!
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. எனவே, 2020 அன்று வெளியிடப்ப்பட்ட அரசாணைபடி, தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு , ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "பீகார், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி உள்ளன. எனவே தமிழ்நாட்டிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்." என்று வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிலd, "சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்ப வில்லை.' என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.