சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அப்போது அவர் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: ராஜீவ் காந்தியை குறித்து பேசிய வழக்கு; சீமானுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு, நீதிபதி வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ? தேர்தலில் போட்டியிட்டவரோ? அல்ல எனவும், வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை என்பதால் புகார் விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை தொடர்ந்து விசாரிக்க ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.