நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காவல் நிலையத்திற்குள் நேற்று (ஏப்ரல் 28) இரவு சிறுத்தை ஒன்று வந்து சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதிகள் நிறைந்த பகுதியாகும். இங்கு, சிறுத்தை, புலி, கரடி, யானை, காட்டெருமை, கருஞ்சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை வெயில் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப் பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன.
இவ்வாறு வெளியேறும் வன விலங்குகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும், குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் சிறுத்தைகள் வளர்ப்பு நாய்களை வேட்டையாடிச் செல்வதும் தொடர்கதையாக இருப்பதாக அப் பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 28) இரவு 8:25 மணியளவில், கூடலூர் அருகே நடுவட்டம் காவல் நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று திடீரென புகுந்தது. அங்கு பணியில் இருந்த காவலர்கள் இரவு நேர பாதுகாப்பிற்காக ரோந்து சென்றிருந்த நிலையில், காவல் நிலையத்தில் ஒரே ஒரு காவலர் மட்டும் இருந்தார். அவரும் உள்ளே இருந்த ஒரு அறையில் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
சிறுத்தை உள்ளே வந்து ஒரு ரவுண்டு அடித்து விட்டு, காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்றது. அப்போது ஏதோ சத்தம் கேட்டதை அடுத்து வெளியே வந்த காவலர், சிறுத்தை செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அவர் காவல் நிலையத்தின் கதவை மூடி மீண்டும் சிறுத்தை உள்ளே வராமல் பார்த்துக் கொண்டார். இந்த காட்சிகள் காவல் நிலையத்தில் பொருத்தப்படுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. சிறுத்தை காவல் நிலையத்திற்குள் வந்த சமயத்தில், சிறுத்தையின் கண்ணில் யாரும் சிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிந்தால் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக பொதுமக்கள் வெளியில் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.