- By சசிக்குமார்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை சாட்டையை சுழற்றி வருகிறது. பண மோசடிகளுக்கு எதிரான விவகாரங்களில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அதிரடி காட்டும் அமலாக்கத் துறைக்கு அதிகார எல்லை என்று ஒன்று உள்ளதா? அமலாக்கத் துறைக்கு விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளதா போன்ற கேள்விகள் தற்போது பரவலாக எழ தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மற்றும் சில அமைச்சர்கள் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் உள்ள நிலையில், கூடவே அதன் அதிகாரம் மீது சலசலப்பும் எழுகின்றன. இது குறித்து சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
அமலாக்கத்துறை:
இந்தியாவில் கடந்த 1956ம் ஆண்டு அமலாக்கத்துறை பிரிவு தொடங்கப்பட்டது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) ஆகிய இரண்டு நிதிச் சட்டங்களின் விதிகளை செயல்படுத்த இந்த பிரிவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
PMLA (சட்டவிரோத பணிபரிமாற்றம்) என்பது ஒரு குற்றவியல் சட்டமாகும். இதில் பணமோசடி செய்பவர்களை கைது செய்து வழக்கு தொடுப்பதைத் தவிர, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் வாங்கிய சொத்துக்களை கண்டறியவும், பறிமுதல் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தவும் அதிகாரம் உள்ளது.

விசாரணை அதிகாரங்கள்:
சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் பண மோசடி வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை முடக்கி, பறிமுதல் செய்ய அதிகாரம் உள்ளது. அந்நியச் செலாவணி சட்டங்களை மீறுதல், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுப் பரிவர்த்தனைகள் போன்றவற்றுடன் தொடர்புடைய குற்றங்களை விசாரிக்கவும் அதிகாரம் உள்ளது.
சட்ட விரோத பணிபரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை கருதினால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க அதிகாரம் உள்ளது.
கைது செய்யும் அதிகாரம்:
சட்ட விரோத பணபரிவர்த்தனை மற்றும் அந்நியச் செலாவணி சட்ட மீறல் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரம் உள்ளது.
சொத்துக்களை பறிமுதல் அதிகாரம்:
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல அதிகாரம் உள்ளது. அமலாக்கத் துறையின் அதிகார வரம்புகள் இந்திய அரசு விதித்த சட்டங்கள் மற்றும் விதிகள் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை, பொருளாதார குற்றங்களை தடுப்பதற்கும், பொருளாதார சட்டங்களை அமல்படுத்துவதற்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இது பற்றி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில், ''அமலாக்கத்துறைக்கு குறைந்தபட்ச அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒரு குற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அமலாக்கத்துறையால் மேற்கொண்டு விசாரணை செய்ய முடியும். அதனால் தான் கடந்த 5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 193 வழக்குகளில் வெறும் 2 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது'' என தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் விவரிக்கையில், ''சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை நடத்த, சம்மந்தப்பட்ட துறையில் முறைகேடு நடந்துள்ளது என மாநில விசாரணை அமைப்பான காவல்துறையோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறையோ தங்களது விசாரணை அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு உறுதியான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், குற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தில் கீழ் அமலாக்கத்துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது.
ஆதாரங்கள் இல்லாமல் விசாரணையை தொடர நீதிமன்றத்தின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆதாரங்களும், நீதிமன்ற அனுமதியும் இல்லாமல் அமலாக்கத்துறையால் விசாரணையை நடத்த முடியாது '' என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்