சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேந்தராக கொண்டு, கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா இன்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அந்த சட்ட முன்வடிவில் "தமிழ்நாட்டில் அரியலூர், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருவாரூர் என 8 மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரே திருச்சி பல்கலைக்கழகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் விளங்குகிறது. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும், உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கும் புதிய பல்கலைக்கழகத்தை தொடங்குவது அத்தியாவசிய தேவையாக உள்ளது.
இதனை சரி செய்யும் விதமாக அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வாழும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கப்படவுள்ளது. கருணாநிதி பெயரிலான பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரும், இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் இருப்பார்" எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி, தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கல்லூரி, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி, குடவாசல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என மொத்தமாக 17 கல்லூரிகள் கருணாநிதி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் அந்த சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேந்தராக கொண்டு, கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு இன்று பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், இது போன்று, நகராட்சிகளுக்குச் சொந்தமான நீர் நிலைகளில் படகு சவாரிக்கு உரிமம் வழங்குதல், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறந்த வெளிகள் ஆகியவற்றை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கம் தவிர்த்து பிற எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாத வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கிராம ஊராட்சிகளில் செயலாட்சி அலுவலரின் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.