திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே சொத்து பிரச்சனை காரணமாக இளைஞர் தனது தாய்மாமாவை (அம்மாவின் தம்பி) வெட்டி படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இளைஞரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திம்மராயன் (48). இவர் ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி. இந்த நிலையில், சக்கரவர்த்தி தனது மூன்று ஏக்கர் நிலத்தை ஒரு நபரிடம் (பைனான்சியர்) வைத்து கடனாக ரூ.38 லட்சம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து, இதற்குரிய கடன்களை அவரது தாய் மாமாவான திம்மராயன் முழுவதுமாக அடைத்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக பைனான்ஸ் நபர்களிடமிருந்து அந்த மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கி தனது பெயரில் மாற்றியுள்ளார். இதன் காரணமாக, சக்கரவர்த்தி மற்றும் திம்மராயன் இருவருக்கும் இடையில், கடந்த 6 மாதகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி நேற்று (பிப்ரவரி 17) காலை, ஜோலார்பேட்டை அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள வாழை தோப்பில் திம்மராயன் இருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். தொடர்ந்து, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஜோலாட்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த திம்மராயன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக சொந்த மாமாவை வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திம்மராயன் உறவினர்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, திம்மராயன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.