திருநெல்வேலி: நெல்லையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக் காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்டு வந்த நூர்நிஷா (37) என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு மாதமாக போலீஸுக்கு தண்ணிக்காட்டி வந்த நிலையில், தற்போது அவர் பிடிபட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன், பள்ளிவாசல் நிலம் தொடர்பான பிரச்சினையில் கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மார்ச் 18 அன்று தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அக்பர் ஷா, பீர்முகமது, அலி ஷேக் மற்றும் 5 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். முகமது தவ்பிக் என்பவரை சுட்டுப்பிடித்தனர். அவர்கள் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நூர்நிஷா தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில், அவரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். எனினும், அவர் சிக்காமல் போலீசாருக்கு தண்ணி காட்டி வந்தார்.

இந்த சூழலில், தனது சொந்த ஊரான மேலப்பாளையம் பகுதியில் நூர்நிஷா தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்றிரவு அங்கு சென்ற தனிப்படையினர், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். நூர்நிஷா சிக்கியுள்ளதால், இந்த வழக்கில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சுட்டுப்பிடிக்கப்பட்ட முகமது தவ்ஃபிக்-இன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க |
ஜாகிர் உசேன் இறந்த நேரத்தில், அவர் முன்னதாக பேசிய ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அதில், நிலப்பிரச்சினை தொடர்பாக தன்னை கொலை செய்து விடுவார்கள் எனப் பேசியிருந்தார்.மேலும் இதுதொடர்பாக புகார் அளித்தும், அதன்மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மாநகர காவல் ஆணையாளர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நெல்லை டவுன் காவல் உதவி ஆணையாளராக இருந்த செந்தில் குமார், ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் காவல்துறையினர் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.