சென்னை: சென்னை ஆணையர் அருண் பதவிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தொடர்ந்து 4 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன. இந்த 4 ஆண்டுக் காலத்தில் மொத்தம் 18 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், காவல் நிலையத்தில் 23 பேர் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளனர் என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் காவல் சித்திரவதைகள், என்கவுண்டர்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலையீடு செய்து தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (JAACT) சார்பில், செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (ஏப்ரல் 17) நடைபெற்றது. இதில், இயக்கத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகு, மாநில ஆலோசகர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அஜிதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகு பேசியதாவது “காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் 2020 ஆம் ஆண்டு தென்தமிழகத்தில், காவல்துறையால் உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இரட்டை கொலை வழக்கிற்கு பிறகு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழக அரசும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியின் போது தொடர்ந்து கைதிகள் காயமுற்று பாதிப்படைந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது, ‘கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் காவல்நிலையத்திற்கு செல்லும் பொழுது, கழிவறை சென்று வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் நிகழ்வுகள் நடக்கதான் செய்யும்’ என்று தெரிவித்தார். ஆனால், அவர் கைது செய்யப்பட்ட போது இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படவில்லையே. அந்த நிலைமை தற்பொழுதும் தொடர்ந்துக் கொண்டுத் தான் வருகிறது.
2022 முதல் 2025 வரை திருட்டு மற்றும் சாதாரண குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை, திருட்டு மற்றும் வேறு வழக்குகளில் சேர்த்து குற்றவாளியை சுட்டு பிடிக்கின்றனர். ஒன்று குற்றவாளிகளை சுட்டு பிடிக்கின்றனர் அல்லது பிடித்து சுடுகின்றனர். இந்த 4 ஆண்டுகளில் காவல்துறையின் கட்டுபாட்டில், காவல்நிலையத்தில் 23 பேர் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி வெளியில் வந்தால், காவல்துறை பணம் கொடுத்து சரி கட்ட பார்க்கிறது.
காவல்துறை குடிமகனை அடிப்பது குற்றமே:
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெய்பீம் படத்தை பார்த்து கண்ணீர் வடித்தவர். நடவடிக்கை எடுக்கவேண்டிய கடுமையான தீவிரமான பொறுப்பு முதலமைச்சருக்கு இருக்கிறது. பள்ளியில் நடைபெற்று வரும் கொடுமைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை வழங்கியும், அந்த அறிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு குடிமகன் காவல்துறையை அடிப்பது குற்றம் என்றால், காவல்துறை ஒரு குடிமகனை அடிப்பதும் குற்றமே. காவல்துறையில் நடக்கும் குற்றங்களை கண்டறிய தனி சட்டம் வேண்டும்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க.. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு! |
சென்னை ஆணையர் அருண் பதவிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தொடர்ந்து 4 என்கவுண்டர் நடந்துள்ளது. இந்த 4 ஆண்டுக் காலத்தில் மொத்தம் 18 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கும் போது, இவை அனைத்தும் காவல்துறைக்கு எதிரானதாகவே உள்ளது. இந்த காவல்துறை என்கவுண்டர் செயலுக்கு முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்.
என்கவுண்டர் செய்து பதக்கம், விருது வாங்கி பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும். சிசிடிவி கேமிராக்கள் இல்லையென்றால் எந்த குற்ற சம்பவமும் வெளிவராது. குற்றவாளிகளை சுட்டு கொலை செய்து பிடிக்கலாம் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. இனி அதுபோன்று செய்தால் முதலில் சட்டமன்றத்தில், சட்டமாக இயற்றியப் பின்னர், என்கவுண்டர் செயல்களில் ஈடுபடலாம். என்கவுண்டர் என்ற தண்டனை இல்லாமல், குற்ற சம்பவங்களை குறைக்க வேண்டும். நடந்த எதுவும் உண்மையான என்கவுண்டர் இல்லை, எல்லாம் பொய்யான ஒன்றே” என தெரிவித்தார்.
லாக்கப் மரணங்களில் தென்தமிழகம் முதலிடம்:
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் அஜிதா, “தென்தமிழகத்தில் குற்றவாளிகளின் பற்களை பிடிங்கி கொடுமை படுத்திய பல்வீர் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எதற்காக இன்னும் பதவியில் வைத்திருக்க வேண்டும்? அரசியல் தலைவர்களின் உதவி இல்லாமல் இவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள். லாக்கப் மரணங்களில் (Lockup Death) தமிழகத்தில் தென்தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. சட்டத்தை முறையாக கையாண்டு இருந்தால் இதுபோன்ற மோதல் கொலைகள் நடைபெற்றிருக்காது.
காவல்துறையின் கட்டுப்பாடு முதலமைச்சரிடம் இல்லை:
இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 21-ல் சட்டத்திற்கு புறம்பாக, சட்ட விரோதமாக செயல்படும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கிறது. ஆனால், ஒரு குற்றவாளியை சுட்டு கொலை செய்து பிடிக்கலாம் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது? திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடு, உள்துறையை வைத்திருக்கும் முதலமைச்சரிடம் இல்லை ” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.