சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் அதே பகுதியில் நடத்தி வரும் அழகப்பா தொலைதூரக் கல்வி மையத்தில் 26 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் விஜியை அணுகி தனக்கு தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் உள்ளது என்றும், அதன் மூலம் இந்து சமய அறநிலைத்துறை, பத்திரப்பதிவுத்துறை, டிஎன்பிஎஸ்சி, மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கி தர முடியும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனை நம்பிய விஜி தனது அழகப்பா தொலைதூர கல்வி மையத்தில் படித்து வந்த 26 நபர்களிடமிருந்து சுமார் 75 லட்ச ரூபாய் பணத்தை ரொக்கமாக வாங்கி செல்வராஜிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறிது நாட்களுக்குப் பிறகு செல்வராஜ் விஜியின் நிறுவனத்தின் பயின்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அதனை வைத்து பணியில் சேர சென்ற போது, அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் செல்வராஜ் தலைமறைவானது மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனிப்படைகள் அமைத்து செல்வராஜை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று சென்னை திருநீர்மலை பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்வராஜ் (47) சென்னை திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் தற்போது விழுப்புரம் தடய அறிவியல் துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
மேலும் செல்வராஜ் இந்து சமய அறநிலைத்துறை, பத்திர பதிவுத்துறை, டிஎன்பிசி மற்றும் ரயில்வேதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி விஜி என்பவரிடம் இருந்து 75 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியதை விசாரணையில் ஒப்புக்கொண்டு உள்ளார்.
இதையும் படிங்க: 'டாஸ்மாக் அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக கூறுவது பொய்'- அமலாக்கத் துறை வாதம்!
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் செல்வராஜிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்து யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் சென்னை காவல் ஆணையர் அருண் இதுபோன்று பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.