சென்னை: நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) வெளியாகின. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், தமிழ்நாடு அளவில் தருமபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் முதலிடமும், அகில இந்திய அளவில் 23 வது இடம் பெற்றார்.
இந்த நிலையில், தேர்வில் வெற்றி பெற்றவர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஏப்ரல் 24) அழைத்து பாராட்டு தெரிவித்தார். இதில், தேர்வில் வெற்றி பெறுவதற்கு இவர்கள் மேற்கொண்ட பயிற்சிகள், முயற்சிகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன என்பது குறித்து வெற்றி பெற்றவர்கள் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.
இதில், யுபிஎஸ்சி தேர்வில் 424 இடம் பிடித்த சிவகாசியை சேர்ந்த ஆர்.கே.கோகுல் கூறும்போது, “ 5 வருடம் முயற்சி செய்து தற்போது 5-ஆவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன். எனது தாய், தந்தை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். நான் முதல் முறையாக தோல்வி அடைந்த போது அழுதேன். எனது குடும்பம் எனக்கு உறுதுணையாக இருந்தது. நான் வேலைக்குச் சென்று கொண்டு தான் யுபிஎஸ்சி தேர்விற்கு முயற்சி செய்தேன்” என்றார்.
யுபிஎஸ்சி தேர்வில் 576 இடம் பெற்ற சென்னையை சேர்ந்த பி.அஸ்வின் கூறுகையில், “கடந்த 7 வருடமாக நான் தேர்விற்கு தயார் செய்து வந்தேன். நான் வழக்கறிஞராக உள்ளேன். சட்டப்படிப்பினை படிக்கும் போதே யுபிஎஸ்சி தேர்விற்கும் படித்து வந்தேன். சட்டம் படித்திருந்தாலும், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்து தற்போது வெற்றி பெற்றுள்ளேன்.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு சான்றாக ஐஏஎஸ் தேர்வில் சாதித்த சாத்தான்குளம் இளைஞர்! |
எனது நண்பர்கள் இதற்கு உதவியாக இருந்தனர். தற்போது நான் மத்திய அரசு வேலையில் உள்ளேன். வேலைக்கு சென்றும் தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளலாம். எனது அண்ணன் மற்றும் என தோழி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ் வழியில் பயின்று வெற்றி:
யுபிஎஸ்சி தேர்வில் 732-ஆவது இடத்தை பெற்ற ஈரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் கூறுகையில், “தனது தந்த பனியன் கம்பெனியில் வேலை செய்யும் கூலித் தாெழிலாளி. 3 ஆண்டுகள் யுபிஎஸ்சி தேர்விற்காக பயிற்சி பெற்றேன். ஒன்றாம் வகுப்பு வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழிக் கல்வியில் படித்தேன் அதன் பின்னர் தனியார் ஐஏஎஸ் அகடாமியில் சேர்ந்து படித்தேன். எனது பெற்றோர்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வைத்தனர்.
யுபிஎஸ்சி தேர்விற்கு விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து போராடும் குணமும் இருந்தால் போதும் எல்லோரும் நிச்சயம் சாதிக்கலாம். தமிழ் வழியில் படித்தாலும் தேர்வினை ஆங்கிலத்தில் எழுதினேன். ஆங்கிலம் புலம் இல்லாததால் சிரமம் இருந்தது. தற்போது வெற்றி பெற்றுள்ளேன். நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது எனது ஆசை. எனவே, மீண்டும் தேர்வினை எழுத உள்ளேன்” இவ்வாறு கூறினார்.
எனது கிராமத்தின் ஆசை:
இந்திய அளவில் யுபிஎஸ்சி தேர்வில் 781 வது இடம் பிடித்த சிவகாசி அருகில் தாயல்பட்டியை சேர்ந்த கோகுலக்கண்ணன் கூறுகையில், “கடந்த 6 வருட பயிற்சியில் 5 முயற்சியில் தற்போது வெற்றி பெற்றுள்ளேன். முதல் பட்டதாரி என்பதால் எந்த மதிப்பெண் எடுத்தாலும், நான் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. அதுவே எனது கிராமத்தின் ஆசையாகும். நான் எனது தந்தையின் வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறேன். வீட்டில் ஆன்லைன் மூலமாக தான் படித்தேன். நாள் ஒன்றிற்கு 4 மணி நேரம் படித்தாலே போதுமனாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேர்வில் 805 இடம் பெற்று வெற்றி பெற்ற சென்னையைச் சேர்ந்த விஷாலி கூறுகையில், “ 5 முறை தொடர்ந்து முயற்சித்து தற்போது 6-ஆவது முறையில் வெற்றி பெற்றுள்ளேன். வெற்றிப் பெறுவதற்கு மன வலிமை, பொருளாதாரம், குடும்பத்தின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். இந்த 7 வருட முயற்சியில் தனது குடும்பம், உறவினர்கள் என அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். நான் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி வருகிறேன். நமது கையில் ஒரு வேலை இருக்கும்போது நாம் தைரியமாக படிக்க முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.