மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கில் தங்களுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிபதிக்கு சகோதரர்கள் இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிழக்கு தெரு முனியாண்டி கோயில் அருகே, சிலர் கஞ்சா கடத்தி வருவதாக கீரைத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய சாக்குமூட்டைகளை வைத்திருந்த முரட்டம்பத்திரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், பிரசாந்த், பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.இதில் பாண்டியராஜனும், பிரசாந்தும் சகோதரர்கள் ஆவர்.
அவர்களிடம் இருந்து 25 கிலோ உலர் கஞ்சா இலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான வெள்ளைக்காளியின் அண்ணன் மகன் சண்முகவேலுதான், 25 கிலோ கஞ்சாவை வைத்திருக்குமாறு தங்களிடம் கொடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறையில் அடைப்பதற்காக போலீசார் அவர்களை அழைத்துச் சென்றனர். அப்போது குற்றவாளிகளான பாண்டியராஜனும், அவரது சகோதரர் பிரசாந்தும் நீதிபதியை பார்த்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், தகாத வார்த்தைகளால் வசைப்பாடிய அவர்கள், கோபத்தில் நீதிமன்றத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கையால் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதில் அவர்கள் கையில் இருந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும், அதை பொருட்படுத்தாத அவர்கள், "ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் சுபாஸ்சந்திர போஸை எதற்காக என்கவுண்டர் பண்ணீங்க? என கேள்வியெழுப்பிய அவர்கள், நாங்களும் வெள்ளைக்காளி பசங்க தான் எனக் கூறி போலீசாருக்கும் மிரட்டல் விடுத்தனர்.
மேலும், தாங்கள் ஜெயிலில் இருந்து வெளியில் வந்து, நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம் எனவும் அவர்கள் மிரட்டினர். இதையடுத்து, அவர்களை அங்கிருந்து இழுத்துச் செல்ல முயன்ற போலீசாரையும், வழக்கறிஞர்களையும் ஆபாச வார்த்தைகளால் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து இருவரும் அர்ச்சனை செய்தனர். இவர்கள் செய்த அட்ராசிட்டியால் போலீசாரே சில நிமிடங்களுக்கு அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் விழிப்பிதுங்கி நின்றனர்.
பின்னர், இருவரையும் மருத்துவமனைக்கு வழக்கமான சோதனைக்காக அழைத்துச் சென்ற போலீசார், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தனியாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மீது போலீசார் தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்திலயே எவ்வித அச்சமுமின்றி நீதிபதிக்கே கஞ்சா கடத்தல் சகோதரர்கள் கொலை மிரட்டல் விடுத்ததோடு, போலீசார், வழக்கறிஞர்களையும் மிரட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிக்கே பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்கும் வகையில் மிரட்டல் விடுத்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.