மதுரை: உலக மரபு நாளான இன்று ஏப்ரல் 18 ஆம் தேதியை முன்னிட்டு ஒரு வார காலம் மதுரை திருமலை நாயக்கர் மஹாலை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக மரபு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி தமிழ்நாடு தொல்லியல் துறை ஒரு வார காலம் உலக மரபு வார விழாவை கொண்டாடுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களில் பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து திருமலை நாயக்கர் அரண்மனையின் பொறுப்பாளரும் தொல்லியல் அலுவலருமான ஆனந்தி, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ''பொதுமக்களிடையே மரபுச் சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நமது மனமார்ந்த கலைகளை அவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் உலக மரபு வார விழா இன்று தொடங்குகிறது. வருகின்ற 24 ஆம் தேதி வரை மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை சுற்றி பார்க்க பொதுமக்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி தொடக்க நாளான இன்றும் 24 ஆம் தேதியும் காலை மாலை இரண்டு வேளைகளில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை அனைத்துமே தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையோடு இணைந்து நடத்தப்படுகிறது. நமது மரபுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். நாட்டுப்புற கலைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்த மரபு வார விழாவின் நோக்கம். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச அனுமதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்'' என்றார்.
இதையும் படிங்க: என்னா வெயிலு...! வண்டலூர் உயிரியில் பூங்காவில் என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
கலை நிகழ்ச்சிகள்
தொடக்க நாளான இன்று காலை 10 மணி அளவில் மதுரை மாவட்டம் தங்கத்தாய் கிராமிய தெம்மாங்கு கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று மாலை 3 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் வைகை பிரபா கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் செல்வ சுருதி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், அன்றைய தினம் பிற்பகல் 3 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் கலை தென்றல் கிராமிய தப்பாட்டக் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பங்கேற்ற கலைஞர்களுக்கு தொல்லியல் அலுவலர் ஆனந்தி சான்றிதழும், நினைவுப் பரிசுகளும் வழங்கினார். அப்போது மதுரை மண்டல கலை பண்பாட்டு துறை அலுவலர் ரமீஷா பேகம் உடனிருந்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்