சென்னை: தமிழ் நாடு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேசும் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவை சேர்ந்த புரூஸ் ஹென்றி என்பவர் தனது உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனு குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் எண் போன்ற கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகள் வெளி நாட்டுக்கு மட்டுமில்லாமல் இந்தியாவிற்குள்ளும் தொலைபேசி மூலம் பேச முடியவில்லை என தெரிவித்தார்.
இதற்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்ப ராஜ், வெளி நாட்டு கைதிகளின் உறவினர்கள் தங்களது தகவல்களை தெரிவிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணுக்கு உறவினர்கள் அனுப்பும் தகவல்கள் சிறை அதிகாரிகள் மூலம் கைதிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர், மனு குறித்து மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் விசாரணையை ஜூன் மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.