மயிலாடுதுறை: திருமணஞ்சேரி கிராமத்தில் 12 மின்கம்பங்கள் முறிந்து கீழேவிழந்து 14 நாட்கள் ஆகியும் சரி செய்யாமல் மின்சார வாரியம் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கீழ அக்ரஹாரம் பகுதியில் 80 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 11ஆம் தேதி சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் விவசாய நிலங்களில் உள்ள 12 மின்கம்பங்கள் அடியோடு பெயர்ந்தும் முறிந்தும் வயல்களிலேயே விழுந்து மின்கம்பிகளும் தரையோடு தரையாக கிடக்கின்றன. இதனை பார்வையிட்ட மின்சாரவாரியத் துறை அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைத்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி, சோயாபீன்ஸ் பயிர்கள் தண்ணீர் இன்றி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நான்கு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோயாபீன்ஸ் கருகி சுருங்கி விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வளர்ந்துள்ள பருத்தி செடிகளுக்கு மருந்து வைத்து செடி சாயாமல் இருப்பதற்கு பார் கட்டி வைத்துள்ளனர். மருந்து கரைப்பதற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இல்லாததால் விவசாயிகள் கலங்கி தவிக்கின்றனர். பருத்தி செடிகளுக்கு மருந்து அடிப்பதற்கு அரை கிலோ மீட்டர் தூரம் சென்று கேனில் தண்ணீர் பிடித்து தலையில் நீண்ட தூரம் சுமந்து வந்து மருந்து அடிக்கின்றனர்.
இதையும் படிங்க: முரசொலி செல்வத்தின் சிலையைத் திறந்து வைத்த முதல்வர்! 'சிலந்தி' கட்டுரைகளும் புத்தகமாக வெளியீடு!
14 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பருத்தி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால் வரப்புகள் காய்ந்து வெடித்து வருகின்றன. குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மின்கம்பங்களை சீரமைத்து தருவதற்கு ஒரு மின்கம்பத்திற்கு 1500 ரூபாய் வீதம் பணம் கேட்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு தலையிட்டு சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி மின் இணைப்பு வழங்கி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பாக மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "சூறாவளி காற்றில் சேதமடைந்த மின்கம்பங்கள் 90 சதவீதம் மாற்றி மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமணஞ்சேரி பகுதியில் உளுந்து பயறு அறுவடை நடைபெறுவதால் ஒருசில இடங்களில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சீர் செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மின்கம்பங்களை மாற்றி சீரமைத்து தருவதற்கு யாரும் பணம் கொடுக்க தேவையில்லை. மின் ஊழியர்கள் பணம் கேட்டார்கள் என்று கூறுவது தவறான தகவல். யாராவது பணம் கேட்டார்கள் என்றால் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் தொடர்புடைய ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்