கோயம்புத்தூர்: மருதமலை பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் ஹைட்ரோதெரபி சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி யானை இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
கோயம்புத்தூர் மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்கு பகுதியில், கடந்த 17 ஆம் தேதி, தாய் யானை ஒனறு தனது குட்டியுடன் நீண்ட நேரமாக அசையாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை கண்காணித்து வந்தனர். அப்போது திடீரென தாய் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு கிழே மயங்கி விழுந்தது. இதனால் குட்டி யானை செய்வதறியாது பரிதவித்து நின்றது.
வரவழைக்கப்பட்ட கும்கி யானை:
இதனையடுத்து, வனத்துறை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் கோவை வனக்குழுவினர் இணைந்து தாய் யானையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். குட்டி யானை, யாரையும் நெருங்கவிடாமல் விரட்டியதால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதிக்கு ஒரியன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் குட்டி யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதன் பின்னர், தாய் யானைக்கு மருந்து மற்றும் உணவு அளித்து, கிரேன் உதவியுடன் அதனை தூக்கி நிறுத்தி வன கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த நான்கு நாட்களாக, யானைக்கு நரம்பு வழி மற்றும் ஊசி மூலமும் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். மேலும் பசுந்தீவனம், பழங்கள், களி மற்றும் தண்ணீர் ஆகியவை உணவாக கொடுக்கப்பட்டது.
ஹைட்ரோ தெரபி சிகிச்சை:
இந்த நிலையில், இன்று (மே 20) வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர், செயற்கை தண்ணீர் தொட்டி அமைத்து, கிரேன் மற்றும் கும்கி யானை உதவியுடன் யானையை அதற்குள் இறக்கி ’ஹைட்ரோதெரபி’ சிகிச்சையை அளித்து வந்தனர். ஆனால், ஹைட்ரோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சில மணி நேரங்களில் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதையும் படிங்க: யாராவது இருக்கீங்களா? சாலையில் ஹாயாக உலா வந்த கரடி! |
அந்த யானையின் உயிரிழப்பிற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் எனவும், முழுமையான காரணங்கள் உடற் கூராய்விற்கு பின்னரே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யானை இறப்பிற்கு காரணம் என்ன?
இதுகுறித்து வன கால்நடை மருத்துவர் சுகுமார் கூறுகையில், "உடல்நிலை சரியில்லாமல் இருந்த யானை கிரேன் உதவியுடன் நிறுத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. யானையின் தொண்டை மற்றும் வாய்ப்பகுதியில் தொற்று காரணமாக புண் ஏற்பட்டிருந்தது. அதனால் உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அதற்காக, யானையின் காது, நரம்பு மூலமாக மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை 100 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, ஜீரணமாவதற்காக ஆசனவாய் வழியாக 80 லிட்டர் தண்ணீர் செலுத்தப்பட்டது. 2.5 மீட்டர் நீளம் மற்றும் அகலமும், 4 மீட்டர் உயரமும் கொண்ட செயற்கை தண்ணீர் தொட்டியில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பி யானையை தொட்டிக்குள் இறக்கி 'ஹைட்ரோதெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டது. தசைகள் இறுக்கம் மற்றும் ரத்த ஓட்டம் சீராகி, புத்துணர்வு அடையும் என எதிர்பார்த்தோம். ஆனால், சிகிச்சை பலனின்றி காட்டு யானை உயிரிழந்தது.
இந்த யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது. அதன் சாணத்தில் அதிகளவில் பிளாஸ்டிகள் இருந்தன. பிளாஸ்டிக்கள் சாணம் வழியாக வெளியே வந்துவிடும் என்பதால் பெரியளவு பாதிப்பு இருக்காது. ஆனால், கெட்டுப்போன உணவால் தொற்று ஏற்பட்டு யானையின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்." என்று அவர் கூறினார்.
குப்பை தான் காரணமா?
யானை உயிரிழந்த மருதமலை அடிவாரத்தில், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருகிறது. இந்த குப்பைக் கிடங்கில் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளன. எனவே, இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டுமென சூழலியல் செயற்பட்டாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், யானை ஒன்று நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.