சென்னை: அமலாக்கத் துறையினர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக அவரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
தனியார் நிறுவனம் ஒன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 100 மெகாவாட் காற்றாலை அமைப்பதற்காக ரூ.30 கோடி கடன் வாங்கியது. ஆனால், அதனை காற்றாலை அமைக்கப்பயன்படுத்தாமல், அந்தப் பணத்தை வேறு கம்பெனிகளுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. சிபிஐ விசாரணையில் வங்கியில் கடன், சட்டவிரோதமாக டி.வி. ஹெச் குழும நிறுவனங்களுக்கு, சென்றதாக தெரிய வந்தது.
இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன் மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு தான் இப்போது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சுமார் ரூ.22 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அதனால் தான் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன், கே.என் நேருவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேரு உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு; நண்பனுக்கு பிறந்த நாள் பேனர் வைத்தபோது நேர்ந்த சோகம்!
அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சி தில்லை நகரில் கே.என் நேருவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நேற்று மாலை முடிவுற்றது. அதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டை சி.வி ராமன் சாலையில் அருண் நேருவின் இரண்டு அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றது. சென்னை சைதாப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்த சோதனையும் நிறைவு பெற்றது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள கே.என் நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் வீட்டில் மட்டும் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடைபெற்று வந்தது. மேலும் ஆர்.ஏ.புரத்தின் மற்றொரு பகுதியில் உள்ள டி.வி.ஹெச் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட அதே முகவரியில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கே.என்.ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரது வீட்டில் வைத்து அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக வீட்டிலிருந்து கே.என். ரவிச்சந்திரனை காரில் ஏற்றி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
