சென்னை: ஒடிசாவில் தமிழர்களை கொச்சைப்படுத்தி விட்டு மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருப்பதாக திமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற பாஜகவின் அஜண்டாவை போல ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ’ஒரே ஆள் ஒரே பேச்சு’ என ரீதியில் பேசி வருகிறார்.
''தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது’’ என சொல்லியிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் கோவைக்கு வந்தபோது இதே டயலாக்கை பேசினார். தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுத்தோல் போர்த்திய புலி. ’’ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லியை போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலரும்’’ என அமித் ஷா சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத்தேர்தலை தமிழர்கள் எப்படி மறப்பார்கள்?
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாண்டியனை பாஜகவினர் எப்படியெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள்? ’’தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?’’ என 2024 மே மாதம் அமித்ஷா சீறினார். இப்போது தமிழ், தமிழர்கள் என, மதுரையில் கபட வேடம் தரிக்கிறார்.
''ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் இருக்க வேண்டிய புதையல் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டது’’ என்று கூறி தமிழர்களை திருடர்கள் என்பது போன்று ஒடிசா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்தி விட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.
அது மட்டுமா? ஐ.ஏ.எஸ் அதிகாரி பாண்டியனை போன்று ஒருவரை சித்தரித்து வேட்டி சட்டை அணிவித்து, வாழை இலையில் பழைய சோறு வைப்பது போல ஒடிசா தேர்தலில் பாஜக வீடியோ வெளியிட்டு தமிழர்களை கேவலப்படுத்தியது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் ஒடிசாவிலேயே இருக்கிறது.
அதிமுக என்னும் கட்சியை மிரட்டியே விழுங்கிக் கொண்டு இருக்கும் அமித்ஷா, கூட்டணி அமைத்த அன்றே தனக்கு அடிமை தான் எடப்பாடி பழனிசாமி என்பதை உலகுக்கு காட்டினார். இன்று திமுக ஆட்சி மீது அவதூறு பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார். அமித்ஷாவுக்கு 2021 சட்டமன்ற தேர்தல் மறந்துவிட்டது போலும்.
பாஜகவின் அண்ணாமலையே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பயன்படுத்தித்தான் பிரசாரம் செய்தார். மோடி பெயரை கூட போடாமல் விளம்பரம் செய்த பாஜகவினரின் கதைகள் நிறைய இருக்கிறது. பாஜக தலைவர்கள் தயவுசெய்து பிரசாரத்துக்கு வந்துவிட வேண்டாம் என்று அதிமுகவின் வேட்பாளர்கள் கெஞ்சும் அளவுக்கு பாஜக மீதான வெறுப்பு தமிழ்நாட்டில் நிலவியது.
அந்த வெறுப்பு அடங்கவில்லை என்பதை அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் காட்டியது. தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜக மீது அது இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும், அவர்களுக்கு துணை போகிறவர்களுக்கும் சரியான தீர்ப்பை தமிழர்கள் எழுதுவார்கள்.
இதெல்லாம் உளவுத்துறை மூலம் அமித்ஷாவுக்கு தெரியாமல் இருக்குமா? தெரியும். தேர்தலில் வெல்வது அல்ல அவர்களது நோக்கம். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைக் கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பாஜக வர வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை இலக்கு. அதற்காக 2026 சட்டமன்ற தேர்தலை பயன்படுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: ''சிறுவன் புகைபிடிக்கும் வீடியோ வைரல்'' - முன்விரோதத்தில் பழிதீர்த்த 2 காவலர்கள்; எஸ்.பி அதிரடி!
அமித்ஷா தொடங்கி இருக்கும் பிரசாரம் எங்களுக்கு வசதியானது தான். ஏற்கெனவே சொன்னது போல, ஆளுநர் தான் எங்களை வெற்றி பெற வைக்கப்போகிறார் என்று நினைத்தோம். ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் போட்டதால் அந்தப் பணியை தற்போது அமித்ஷா கையில் எடுத்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றிகள்.
தொண்டர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் மக்கள் நம்பிக்கையை மட்டும் எப்படி பெற முடியும்? எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் தமிழ்நாட்டில் எத்தனை “ஷா” கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. திமுக கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல. அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் வெற்றி பெறும்." என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.