திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. இதில் ஆணையாளர் சுக புத்திரா, துணை மேயர் ராஜு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலப்பாளையம் மண்டலத்தில் 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளை ஒட்டி புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 45 வது வார்டு உறுப்பினராக உள்ள மேலப்பாளையம் மண்டல தலைவர் இக்லாம் பாதுஷா மற்றும் 46 வது வார்டு உறுப்பினரும் சுகாதார குழு தலைவருமான ரம்ஜான் அலி ஆகியோர் தனது வார்டு பகுதியிலேயே சமுதாய நலக்கூடம் அமைந்துள்ளதாக வார்த்தை போரால் மோதிக் கொண்டனர். அப்போது, மேயர், ஆணையாளர் முன்னிலையில் பேசிய மண்டல தலைவர், பெண் மாமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. எவ்வித பணிகளும் மாநகராட்சியில் நடைபெறுவதில்லை என குற்றம் சாட்டினார்.
இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இப் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு இரு மாமன்ற உறுப்பினர்களையும் சமாதானம் செய்த மேயர் ராமகிருஷ்ணன், ஆணையாளர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.
'நீங்களும் பட்டதாரி இல்லை'
தொடர்ந்து பேசிய பாளையங்கோட்டை மண்டலத்தைச் சார்ந்த 35 வது வார்டு திமுக உறுப்பினர் பேச்சியம்மாள், தனது வார்டுக்கு எவ்வித பணிகளும் மாநகராட்சி மூலமாக செய்து தரப்படவில்லை. பணிகள் குறித்த விபரங்கள் அஜெண்டாவில் ஆங்கிலத்திலேயே இடம் பெற்றுள்ளது. மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியாத நிலையில் உள்ளேன். நானும் படிக்கவில்லை, நீங்களும் படிக்கவில்லை... நானும் பட்டதாரி இல்லை, நீங்களும் பட்டதாரி இல்லை என பேசிய மாமன்ற உறுப்பினர் தமிழக அரசின் உத்தரவுகள் தமிழில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்ட பிறகும் திருநெல்வேலி மாநகராட்சியில் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது வருத்தமடைய செய்துள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பெண் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்தார்.
இதையும் படிங்க: யுபிஎஸ்சி: 3-வது முயற்சியில் 'ஐஏஎஸ்'... கடலூர் சரண்யா சொல்லும் அந்த 3 விஷயங்கள்!
திமுக உறுப்பினர் வெளிநடப்பு
இதுபோன்று பரபரப்பாக சென்று கொண்டிருந்த மாநகராட்சி கூட்டத்தின் நடுவே திமுக மாமன்ற உறுப்பினர் ரவீந்தர் தனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறி குடிநீர் பாட்டிலை வேகமாக மேஜையில் அடித்தவாறு, அதிமுக உறுப்பினர்களுக்கு இருக்கும் மரியாதை கூட திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.
முன்னதாக அதிமுக உறுப்பினர் சந்திரசேகர் பேசிக் கொண்டிருந்த போது திமுக உறுப்பினர் ரவீந்தர் குறுக்கிட்டார். அப்போது அவரை பார்த்து கிண்டலாக அதிமுக உறுப்பினர் குடிநீர் பாட்டிலை எடுத்து வீசுவதை போல காட்டினார். அதன் பிறகு கூட்டத்தில் பேச முடியாமல் விரக்தி அடைந்து திமுக உறுப்பினர் ரவீந்தர் வெளிநடப்பு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி தேர்தல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் மாமன்ற உறுப்பினர்கள் மேயர் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால் அவரை மாற்றி விட்டு ராமகிருஷ்ணன் கடந்தாண்டு இறுதியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக மாநகராட்சி கூட்டம் பிரச்சனைகள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து வந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மீண்டும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்