திண்டுக்கல்: நத்தம் அருகே ராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சின்னன் (55). இவர் அப்பகுதியில் பிரதானமான மா, தென்னை, புளி ஆகியவற்றை விவசாயம் செய்து வந்து உள்ளார். அப்போது, யூடியூபில் விவசாயம் தொடர்பான வீடியோக்களை பார்த்து அவ்வப்போது விவசாயத்தில் புதிய யுக்திளையும் மேற்கொண்டு பார்த்துள்ளார். அப்போது அவரை கவர்ந்தது தான் 'வாட்டர் ஆப்பிள்' சாகுபடி.
'வாட்டர் ஆப்பிள்' என்றால் என்ன?
கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் மட்டும் வளரக்கூடிய இந்த 'வாட்டர் ஆப்பிள்' என்பது ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது. 'வாட்டர் ஆப்பிள்' செடி, ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக் கூடியது. வெண்மை மற்றும் இளஞ் சிவப்பு நிறத்தில் இப்பழங்கள் உள்ளன. இந்த பழத்தின் பெயர் 'வாட்டர் ஆப்பிள்' என்று இருந்தாலும், ஆப்பிளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த பழம், நீர்ச்சத்து நிரம்பி தாகத்தை தணிக்கக் கூடியது.
கர்நாடகாவில் இருந்து வந்த செடி
இந்நிலையில், நத்தம் விவசாயி ’வாட்டர் ஆப்பிள்’ விவசாய முறை குறித்து யூடியூபில் பார்த்து உள்ளார். இதையடுத்து யூடியூபில் இது தொடர்பாக பேசிய கர்நாடக விவசாயி ஒருவரை தொடர்பு கொண்டு 'வாட்டர் ஆப்பிள்' செடியை வாங்கி தனது தோட்டத்தில் ஊடு பயிராக பயிரிட்டுள்ளார். அந்த செடி நன்கு வளர்ந்து நான்கு தினங்களுக்கு ஒரு முறை 20 முதல் 25 கிலோ வரையிலான வாட்டர் ஆப்பிள்களை தந்து விவசாயி சின்னன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் தொடர்ந்து அதனை பயிரிட்டுள்ளார்.
தற்போது இந்த பழம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால், தற்போது இவர் தோட்டத்தில் ஊடுபயிராக சுமார் 15-க்கும் மேற்பட்ட வாட்டர் ஆப்பிள் மரங்களை வைத்து வேளாண்மை செய்து வருகிறார்.
இங்கு விளையக் கூடிய இந்த 'வாட்டர் ஆப்பிள்'களை மதுரை, திண்டுக்கல் போன்ற இடங்களுக்குச் சென்று பழக்கடைகளில் விற்பனை செய்து வருவது மட்டுமின்றி நேரடியாகவும் விற்பனை செய்து வருகிறார் விவசாயி சின்னன். ஒரு கிலோ வாட்டர் ஆப்பிள் ரூ.150 ரூபாய் முதல் ரூ.200 ரூபாய் வரை விற்பனையாகிறது. நத்தம் பகுதியில் யூடியூபில் பார்த்து மாற்று விவசாயம் செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் விவசாயி சின்னனை அப்பகுதி விவசாயிகள் பாராட்டுவது மட்டுமின்றி இவரைப் பார்த்து தங்களது தோட்டங்களில் ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "நாங்கள் சேற்றில் கால் வைத்தால் தான் உங்களுக்கு சம்பளம்" |
இதுகுறித்து பேசிய 'வாட்டர் ஆப்பிள்' விவசாயி சின்னன், “பரம்பரையாக விவசாயத் தொழில் செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் செல்போன் மூலம் யூடியூபில் இந்த வாட்டர் ஆப்பிள் குறித்து அறிந்து கொண்டேன். புதிய முயற்சியாகத் தான் இந்த வாட்டர் ஆப்பிளை விவசாயம் செய்தேன். ஆனால், இன்று நல்ல மகசூலைத் தருகிறது. மேலும் ஒரு ஏக்கருக்கு இந்த தண்ணீர் ஆப்பிளை விளைய வைக்கும் எண்ணம் உள்ளது” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்