சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசிய கருத்துக்கள் இன்றளவும் பொருந்தும். இந்தி திணிப்புக்கு எதிரான விடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாணவர்கள் நிச்சயம் வென்றெடுப்பீர்கள். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டும் என மும்மொழிக் கொள்கையை கொண்டு வருகின்றனர் என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, 1000 இருக்கைகள் கொண்ட கலைஞர் கலையரங்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 20) திறந்து வைத்தார்.
பின்னர், மேடையில் பேசிய அவர், "நான் படித்த லயோலா கல்லூரியை விட அதிகமாக, நந்தனம் கல்லூரிக்கு நண்பர்களுடன் விளையாட மைதானத்திற்கு வந்திருக்கிறேன். இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
கல்லூரிக்கு வகுப்பறை, ஆய்வரங்குகள் முக்கியமானது போன்று கலையரங்கமும் மிக முக்கியம். கல்லூரிக்கு பிறகு இந்த கலையரங்கம் பல நினைவுகளை தரும் என நம்புகிறேன். இந்தி திணிப்பிற்கு எதிராக முதலில் மாணவர்கள் போராட்டம் தொடங்கியது நந்தனம் கல்லூரியில் தான். இந்தக் கல்லூரி மாணவர்கள் விருப்பி அழைத்தன் பேரில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இக்கல்லூரியில் பேசுவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அவரை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தால், அரசு கல்லூரியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பேசுவதற்கு அனுமதித்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக அவர் பேசிய கருத்துக்கள் இன்றளவும் பொருந்தும். இன்றைய காலத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான விடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாணவர்கள் நிச்சயம் வென்றெடுப்பீர்கள். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டும் என மும்மொழிக் கொள்கை போன்றவைகளை கொண்டு வருகின்றனர். இதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்கள் எழுச்சி தான் இன்றளவும் உயிர்ப்போடு இருக்கிறது. கல்விக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் தேசிய கல்விக் கொள்கை, கல்வி நிதியை தராமல் இருப்பது என பல தொந்தரவுகளையும், சூழ்ச்சிகளையும் மத்திய அரசு கொடுக்கிறது. இதனை மாணவர்கள் புரிந்து கொண்டால் எதிரியை வெல்லலாம். தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அது என்றும் தொடரும் என நம்புகிறேன்." என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.