''கண்களை கவரும் பாதுகாப்பு துறை சாதனங்கள்'' - பொருளாதார வளர்ச்சியை பறைசாற்றும் ‘ஏரோ டெஃப்கான்’ மாநாடு!
ருத்ராஸ்ட்ரா ட்ரோன் மூலம் எதிரியின் பகுதிகளை தாக்குவது மட்டுமல்லாமல் எல்லை பகுதிகளை பாதுகாப்பது மற்றும் எதிரிகளின் பகுதிகளை கண்காணித்து ரானுவ அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Published : October 7, 2025 at 7:52 PM IST
- By செ. சிவக்குமார்
காண்போரின் கண்களை கவர்ந்திழுக்கும் அளவுக்கு பாதுகாப்பு துறை சாதனங்களை காட்சிப்படுத்தி இந்திய கண்டுபிடிப்புகளையும் உலக அளவில் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பை '‘ஏரோ டெஃப்கான்’' மாநாடு ஏற்படுத்தி தந்துள்ளது என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் டிட்கோ, BCI ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்) மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான “AeroDefCon 2025” என்ற மூன்று நாள் சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இன்று முதல் 9 ஆம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் லண்டன், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்த 300 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. குறிப்பாக தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே 5000க்கும் மேற்பட்ட வணிக சந்திப்பு கூட்டங்களும் இந்த மாநாட்டில் நடைபெறுகின்றன.

200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள்
மேலும் மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் Boeing, Airbus, Lockheed Martin, Dassault Aviation, HAL, BEL, L&T Defence, Rolls-Royce, Safran மற்றும் Tata Advanced Systems போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.
மேலும் IIT Madras, SRM, Anna University மற்றும் MaDeIT Innovation Foundation, மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் பங்கேற்று தங்களுடைய அரங்குகளை அமைத்துள்ளன. மேலும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு Unmanned Aerial Vehicle நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் தொழில்துறை வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய தொடர்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
'ருத்ராஸ்ட்ரா' என்ற அதிநவீன ராட்சத ட்ரோன்கள்
இந்த கண்காட்சியில் பாதுகாப்புதுறை சார்ந்த ராணுவ ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், ராக்கெட்கள் ஆகியவற்றின் வகைகள் மாதிரி வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவற்றுக்கான உதிரி பாகங்களும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய ஆயுதப்படையில் பயன்படுத்தக்கூடிய ஏவுகனைகள், பலம் பொருந்திய ஆயுதங்கள், போர் விமான குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்பான பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ராணுவ வீரர்கள் பயன்படுத்தக்கூடிய உடைகள், காலணிகள், பாதுகாப்பு உபகரணங்கள், பிரதமர் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு அம்சங்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படையில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் நிறைந்த புதிய ரக விமானங்கள் பீரங்கிகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போர் காலகட்டத்தில் எதிரிகளின் பகுதிகளுக்கு சென்று குண்டு வீசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'ருத்ராஸ்ட்ரா' எண்ணும் அதிநவீன ராட்சத 'ட்ரோன்' காண்போரின் கவனத்தை ஈர்த்தது.

உலக அளவில் கொண்டு சேர்ப்பதற்கு வாய்ப்பு
இது குறித்து 'ருத்ராஸ்ட்ரா' ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்த்திகேயன் கூறுகையில், 'ருத்ராஸ்ட்ரா' ட்ரோன் மூலம் எதிரியின் பகுதிகளை தாக்குவது மட்டுமல்லாமல் எல்லை பகுதிகளை பாதுகாப்பது மற்றும் எதிரிகளின் பகுதிகளை கண்காணித்து ரானுவ அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த கண்டுபிடிப்புகள் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம், இந்திய கண்டுபிடிப்புகளை உலக அளவில் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி தந்து இருக்கிறது'' என்று கார்த்திகேயன் கூறினார்.

கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள்
இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களை மெய்நிகர் காட்சி virtual reality மூலம் காணும் வகையில் புதிய கண்டுபிடிப்பை பொறியியல் கல்லூரி மாணவர்கள் காவியாஸ்ரீ மற்றும் ஆதித்யா ஆகியோர் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.

இதுகுறித்து காவியா ஸ்ரீ கூறும்போது, ''தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் எங்களது புதிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்று, அதன் வாயிலாக இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எங்களின் கண்டுப்பிடிப்பு மூலம் புதிய ஸ்டார்ட்-அல் நிறுவனத்தை துவங்குவதற்கான வாய்ப்பை இந்த சர்வதேச மாநாடு ஏற்படுத்தி தந்துள்ளது'' என்று காவியா ஸ்ரீ தெரிவித்தார்.

