சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத குற்றம்சாட்டப்பட்ட இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த 2024ம் ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று (ஏப்ரல் 25) விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜெயராஜ் குமார் மற்றும் பழனி ஆகிய இருவர் தரப்பிலும் 2 லட்சம் ரூபாய்க்கான ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாததால், இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் தைவானிய தொழில் பூங்கா... '20,000 பேருக்கு வேலைவாய்ப்பு' - அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு!
மேலும், குற்றபத்திரிகையுடன், சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்தது. அதில், '' பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தகுதி அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படவில்லை. பிரிவு 21 மீதான விதிமுறை மீறலின் சாத்தியம் அடிப்படையிலேயே ஜாமீன் வழங்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்து விலகாவிட்டால் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் பதவியா? ஜாமீனா? எது முக்கியம் என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜியே முடிவு செய்யட்டும் என'' உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்