திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல் சேவியர் ஹட்ரிக் என்பவரது மனைவி ரெஜி டிம்னா. இவர் உடல் எடையை குறைக்க முடிவு செய்து அதற்கான முயற்சி எடுத்துள்ளார். இந்த நிலையில், நெல்லையில் உள்ள பிரபல தனியார் உடல் எடை குறைப்பு மையம் சார்பில் ரெஜி டிம்னாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இயந்திர மசாஜ் மூலம் உடல் எடை குறைப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாள் ஒன்றுக்கு அரை கிலோ எடையை குறைப்பதாகவும், 60 நாளில் 30 கிலோ எடை குறைத்து விடுவதாகவும் உறுதியும், உத்தரவாதமும் கொடுத்துள்ளனர். எனவே இயந்திர மசாஜ் மூலம் 60 நாட்களில் 30 கிலோ எடையை குறைத்து விடுவதாகவும் அதற்கு கட்டணமாக ரூபாய் 90 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ரூ.90,000 பணம் செலுத்தி ரெஜி டிம்னா மேற்படி நிறுவனத்தில் இயந்திர மசாஜ் மூலம் உடல் எடை குறைப்பு செய்வதற்கு பயிற்சி எடுத்துள்ளார். பயிற்சிக்கு பின் ரெஜி டிம்னாக்கு முதுகு வலி ஏற்பட்டதால் மருத்துவரை ஆலோசித்த போது மருத்துவர் இயந்திர மசாஜ் காரணமாகத் தான் முதுகு வலி ஏற்பட்டுள்ளது எனவும் அதனால் தொடர்ந்து இயந்திர மசாஜ் செய்யக்கூடாது எனவும் அறிவுரையும், ஆலோசனையும் வழங்கி உள்ளார்.

இந்நிலையில், ஏழு நாட்கள் மட்டுமே இயந்திர மசாஜ் மூலம் பயிற்சி மேற்கொண்ட ரெஜி டிம்னா தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை என்பதால் அந்த நிறுவனத்திடம் கட்டணமாக செலுத்திய தொகையினை திரும்ப கேட்டுள்ளார் ஆனால், அந்நிறுவனம் பணத்தை தர மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதையும் படிங்க: 'பசங்களா விட்டாச்சு லீவு'... பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அன்பான அறிவிப்பு!
எனவே திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் ரெஜி டிம்னா வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் தனியார் நிறுவனம் கட்டணமாக வசூல் செய்த தொகை ரூபாய் 90,000-த்தை ரெஜி டிம்னாவுக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 25,000 ரூபாயையும், வழக்குச் செலவு ரூ. 10,000 சேர்த்து மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்