திருநெல்வேலி: வக்ஃப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலப்பாளையத்தில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு அரசு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், வக்ஃப் சட்டத்தில் சில பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாகவும், வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாத் தலைவர்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இணைந்து இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மேலப்பாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் மேலப்பாளையம் நகரில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. இதனால் மேலப்பாளையம் பஜார் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் காவல்துறை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ''இருட்டுக்கடையை எழுதிக் கேட்கும் பாஜக நிர்வாகி?'' - போலீஸ் கமிஷனரிடம் பகீர் புகார்!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரானது இல்லை என கூறினார். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக 12 மணி நேரம் விவாதத்திற்கு பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்கள் மற்றும் எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி நள்ளிரவு வக்ஃப் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதே போல், மாநிலங்களவையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.