சென்னை: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரனை, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி வரவழைத்து அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழ்நாடு குழுவினர் அனுமதித்துள்ளனர். கிசிச்சைப் பெற்று வரும் மருத்துவரின் மனைவியிடம் தொலைபேசி வழியாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகிச்சை விவரங்களை கேட்டறிந்ததோடு, அரசு சார்பில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்யப்படும் என கூறினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது 22.04.2025 அன்று நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக டெல்லியில் சிறப்பு உதவி மையம் தொடங்குவதற்கு உத்தரவிட்டு, அதன்படி உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும், காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவிகளை செய்ய புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூலை, நேரடியாக ஜம்மு காஷ்மீர், பெஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, அவர் அப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி டாக்டர் பரமேஸ்வரனுக்கு அந்த மாநிலத்திலேயே தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஏர்-ஆன்புலன்ஸ் மூலம் இன்று மதியம் டெல்லி வந்தடைந்த அவரை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் ஆஷிஷ் குமார் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று டாக்டர் பரமேஸ்வரின் மனைவி டாக்டர் நயன்தாராவை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு அவரது கணவரின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தமிழ்நாடு அரசு மூலம் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அப்போது முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கைக்கு டாக்டர் நயன்தாரா நன்றி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 பேர் டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு நேற்று ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அழைத்து வரும் பணிகள் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.