கன்னியாகுமரி: குருத்தோலை ஞாயிறு பவனியையொட்டி நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி, ''ஓசன்னா'' பாடலை பாடியவாறு பவனி வந்தனர்.
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். 'உயிர்ப்பு விழா' என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, கோவேறு கழுதை மேல் அமர வைத்து ஜெருசலேம் நகருக்குள் பவனி வந்தார். அப்போது மக்கள், ஒலிவ மர கிளைகளை கைகளில் ஏந்தியபடி அவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த நாளை நினைவுகூறும் வகையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகை வருகிற 20 ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று (ஏப்ரல் 13) ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில், குமரியில் உள்ள கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில், கிறிஸ்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி 'ஓசன்னா' என்ற பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து, ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல கன்னியாகுமரி, தக்கலை, குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
மேலும் தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியுள்ளது. வரும் (எப்ரல் 17) வியாழக்கிழமை பாதம் கழுவும் நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறும். தொடர்ந்து, ஏபரல் 18, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடும், திருச்சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடைபெறும். இறுதியாக , ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா கொண்டாடப்பட உள்ளது.
குருத்தோலை ஞாயிறன்று மக்கள் கைகளில் ஏந்தியபடி கொண்டு செல்லும் குருத்தோலைகள், அடுத்த ஆண்டில் வரும் திருநீற்றுப்புதன் என்னும் நாளின்போது எரித்து சாம்பலாக்கப்படும். அந்த சாம்பல் மக்களின் நெற்றியில் பூசப்படும் என்பது குறிப்பிடதக்கது.
சாந்தோமில் குருத்தோலை பவனி: இதேபோல், சென்னை சாந்தோம் பேராலயத்தில் இன்று காலை குருத்தோலை பவனியும், தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்திபடி, 'ஓசன்னா' பாடலை பாடிக்கொண்டு பவனி வந்தனர். குருத்தோலைகளில் சிலுவையின் அடையாளத்தை பல்வேறு விதத்தில் வடிவமைத்து அதனை கையில் பிடித்து சென்றனர். பிரார்தனையில் கலந்து கொண்ட மக்கள் மீது பாதிரியார்கள் புனிதநீரை தெளித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்