சென்னை: குழந்தைக்காக சேர்த்து வைத்திருந்த 40 சவரன் நகையை திருடி சென்ற நபரை குறித்த விவரங்கள் அகப்படாத நிலையில், பலே திட்டம் வகுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லிங்கம் நகர் பகுதியில், பெண் (சிறப்பு) குழந்தையுடன் தம்பதி வசித்து வருகின்றனர். குழந்தையின் தாய் அவரை தினமும் காலையில் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள டியூஷன் சென்டருக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று விட்டு, நான்கு மணி நேரம் கழித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
மே 22 அன்று, இதே போல வீட்டை பூட்டி விட்டு குழந்தையை டியூஷனுக்கு தாய் அழைத்து சென்றுள்ளார். வீடு திரும்பியபோது, முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு தலைகால் புரியாமல் கதறி அழுதுள்ளார்.

இவரது அழுகை சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், சம்பவம் தொடர்பாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்த காவல் துறையினர், தாய் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், எந்த தடயமும் சிக்காததால், அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலைக்கவசம் மற்றும் கை உறையுடன் அங்கு வந்து சென்றது தெரியவந்தது.
கேமரா பதிவில் கிடைத்த அடையாளங்களைக் கொண்டு குற்றவாளியை கண்டுபிடித்து விடலாம் என காவல்துறையினர் நினைத்துள்ளனர். ஆனால், அதுவும் சாத்தியமற்றதாக, அடுத்த கட்ட நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர். வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதில், பெட்ரோல் நிரப்புவதற்காக சம்பந்தப்பட்ட நபர் ஒரு பங்கில் நின்ற போது, வாகனத்தின் பதிவெண் தெளிவாக சிக்கியுள்ளது. அதனடிப்படையில் விசாரணையை தொடர்ந்த காவல் துறையினருக்கு, அது விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரது வாகனம் என தெரியவந்துள்ளது.
உடனடியாக, தனிப்படை காவல்துறையினர் விருதுநகர் விரைந்து, பிரபாகரன் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அவர் சென்னை சென்றுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது மொபைல் எண்ணில் இருந்தே காவல்துறையினர் பிரபாகரனை அழைக்க செய்து, உடனே ஊருக்கு திரும்பி வர கூறும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
மனைவி பேச்சை நம்பிய பிரபாகரன், இரு நாள்களில் வருவதாக உறுதி அளித்துள்ளார். பிரபாகரனுக்கு பொறி வைத்து காவல்துறையினர் விருதுநகரில் காத்திருப்பது அவருக்கு தெரியாது. இரண்டு நாள்கள் கழித்து வந்த பிரபாகரனை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், “திருச்சியில் பூட்டியிருந்த வீட்டில் ஏழு சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு, அந்த நகையை விற்று ஒரு இரு சக்கர வாகனத்தை வாங்கி சென்னையில் மற்றொரு கொள்ளை சம்பவத்தை நடத்தினேன். மீண்டும் திருச்சியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்னை சென்று முடிச்சூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டி இருக்கும் வீட்டை நோட்டம் விடும் போது, ஒரு வீடு பூட்டி இருந்ததை உறுதி செய்தேன். உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது அலமாரியின் சாவி அருகே இருந்ததால், அதை எடுத்து அலமாரியைத் திறந்து நகை பணத்தை எடுத்துக் கொண்டேன்,” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், செங்கல்பட்டு அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி, இரண்டு அடகு கடையில் தனித் தனியாக நகைகளை வைத்து பணத்தை வாங்கியதாகவும், அதிக கடன் இருந்ததால் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கே சென்று திருப்பி கொடுத்து விட்டதாகவும் காவல்துறையினரிடத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் காவல்துறையினருக்கு சந்தேகம் எழ கிடுக்குபிடி விசாரணையைத் தொடங்கினர். அதில் பிரபாகரன் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்தது.
கடந்த 10 வருடங்களாக தனி ஒருவனாய் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வருவதாகவும், கொள்ளையடித்த நகைகளை விற்று ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி வீடு கட்டி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். சென்னை புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம், பெருங்களத்தூர், குன்றத்தூர் பகுதிகளில் இருபத்திற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் ஏற்கனவே சிறை சென்றுள்ளதும் தெரியவந்தது.
அதன் பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட 40 சவரன் தங்க நகை முழுமையாக போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.