சென்னை: இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்படும் இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று (ஏப்ரல் 28) புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் விருதுகளை பெற்றனர். அதில் சமையல் கலை நிபுணரான தாமுவுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் தென்னிந்திய சமையல்காரர்கள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த 'செஃப்' தாமு அவர், “நான் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன். ஆனால், பத்மஸ்ரீ விருது பெற்றது பெருமையாக உள்ளது. சமையல் கலையைச் சேர்ந்தவர்களில் தென்னிந்தியாவில் முதல் தமிழனாக இந்த விருதை பெற்றுள்ளேன். பல நாட்களாக குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களை நேரில் பார்க்க முடியுமா? என நினைத்துள்ளேன். நேற்று அனைவரையும் ஒரு சேர நேரில் பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சி. இந்த விருதை எனது வாழ்நாள் சாதனையாளர் விருதாக நினைக்கிறேன்.
இந்த விருதை கேட்டரிங் ஸ்டூடண்ட்ஸ், வளர்ந்து வரும் சமையல் கலைஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். முதலில் எல்லாம் ’குக்’ என்று தான் சொல்வார்கள் இப்போது ’செஃப்’ என்று அழைக்கிறார்கள். ஆனால், இனி நான் பத்மஸ்ரீ என்று பெயரோடு கூறுவது பெருமையாக உள்ளது. வளர்ந்து வரும் செஃப்களுக்கு நான் கூறுவது கடின உழைப்புடன், சமூகத்திற்கு தொண்டாற்றுவதும் அவசியம்.
இந்த விருது கேட்டரிங் கல்லூரி மாணவர்களுக்கும் செஃப் கமிட்டியினருக்கும் இது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விருது வாங்கும் அரங்கிற்குள் இருவரை மட்டும் தான் அனுமதிப்போம் என்று தெரிவித்திருந்தார்கள், மிகவும் வேண்டி கேட்டு நான்கு பேரை அனுமதிக்க சொன்னோம். என் மகள், மருமகன், பேத்தி எல்லாம் இதற்காகவே லண்டனில் இருந்து வந்தார்கள். அனைவரும் மிகவும் பெருமையாக உணர்ந்தார்கள். தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் இந்த அளவிற்கு வளர்ந்து வந்ததற்கு ஒற்றுமை தான் காரணம். அந்த ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: வாழ்த்துகளுக்கு மத்தியில் பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பத்ம பூஷன் அஜித்! |
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் வரும் ஆண்டுகளில் இயல்பாக மக்களிடையே உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆய்வுகள் சொல்வது தொடர்பான கேள்விக்கு, “உணவு சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் உடல் பருமன் ஏற்படும். அதற்கு நானே சான்று. ’உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று சொல்கிறோம். அதே போல், ’அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ சரியான உணவு சரியான அளவில் எடுத்துக் கொண்டு அதனுடன் உடற்பயிற்சியும் அவசியம். சமையல் கலை பணியை ஆத்மார்த்தமாக எந்த அளவிற்கு செய்கிறோமோ, அந்த அளவிற்கு இதில் வெற்றி கிடைக்கும்” என கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.