கோயம்புத்தூர்: கோவை, பீளமேடு அருகே உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இருந்து ரூ.1,500 பணம் காணாமல் போனது குறித்த விசாரணையில் மாணவி மீது குற்றம் சாட்டியதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாணவியின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டு திருவண்ணாமலை சென்றனர். இதற்கிடையே மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மருத்துவமனையில் கல்லூரி நிர்வாகத்தினர் காசு காணாமல் போனது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாணவியுடன் இருந்த மாணவர், சக மாணவர் ஒருவருடன் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கடைசி நிமிடங்களில் அவரது மனநிலை என்னவாக இருந்தது? மாணவி பகிர்ந்துகொண்டது என்ன என்பது குறித்து உடன் இருந்த மாணவர் சக மாணவனிடம் செல்போனில் உரையாடியுள்ளார்.
மாணவியின் கடைசி நொடிகள்
அந்த ஆடியோவில், " பணம் காணாமல் போனது குறித்து எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் இருவருமே பணத்தை எடுக்கவில்லை என்று தெரிவித்தோம். ஆனாலும், எங்களது வீட்டில் சொல்வதாக கல்லூரி முதல்வர் மணிமொழி கூறினார். இதனால் பயந்துபோன மாணவி தனது வீட்டில் சொல்ல வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சினார். மேலும், நம்பிக்கை இல்லையென்றால் சிசிடிவி-யை பாருங்கள் என்றுகூட மாணவி கெஞ்சினார். ஆனால், கல்லூரி முதல்வர் அதை ஏற்கவில்லை. மாணவியை கடுமையாக பேசினார். பின்னர் விசாரணை முடிந்தும்கூட மாணவி அழுதுகொண்டே இருந்தார். அப்போது சரி வா போகலாம் என்று மாணவியிடம் அவரது பையை எடுத்துக்கொடுத்தேன். ஆனால், பையை நீயே மாட்டிக்கொள் என மாணவி கூறினார். அழுதழுது களைப்பாக இருக்கிறார் என நினைத்து நானே அவரது பையை வைத்துக்கொண்டேன். சரி போகலாம் வா என நான் கூறியதற்கு, நீ முன்னாள் போ வருகின்றேன் என்றார். நான் படியில் ஆறு படிகளை கடந்த பிறகு பின்னால் திரும்பி பார்த்தேன். மாணவி மாடியில் இருந்து குதிக்க நின்று கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்து நான் கத்தும் போதே குதித்துவிட்டார்'' என மாணவர் அந்த ஆடியோவில் கூறினார்.
'கடைசி வரை சடலத்தை காட்டவில்லை'
மேலும் தொடர்ந்து அந்த ஆடியோவில், நேற்றைய தினம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு தன்னை வரச் சொன்ன போலீசார் , தன்னிடம் விசாரணை எதுவும் நடத்தவில்லை எனவும், காலையிலிருந்து மாலை பீளமேடு காவல் நிலையத்திலேயே அமர வைத்து விட்டதாகவும் தெரிவிக்கிறார். அத்துடன், அரசு மருத்துவமனையில் மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு செல்லக்கூடாது எனக்கூறியதுடன், போனால் வழக்கு போட்டு விடுவேன் என காவல்துறையினர் மிரட்டியதாகவும் கூறுகிறார். மேலும், கடைசி வரை மாணவியின் உடலை போலீசார் பார்க்கவே விடவில்லை எனவும் அந்த மாணவர் ஆதங்கத்துடன் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
இதனிடையே நேற்றைய தினம் மாணவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு புகார் கடிதம் ஒன்றை பீளமேடு காவல்துறைக்கு கொடுத்துள்ளனர். அதில், கல்லூரி முதல்வர் மணிமொழி மற்றும் உடன் இருந்த ஆசிரியர்கள் லாவண்யா, உமா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியுடன் விசாரணையின் போது இருந்த மாணவரை கல்லூரி நிர்வாகம் மறைத்து வைத்துள்ளது என போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவர்கள் கூறி வந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறையினர் மாணவரை காவல் நிலையத்தில் மாலை வரை அமர வைத்திருந்ததாக மாணவர் பேசிய ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்