கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, சயான் இன்று (ஏப்ரல் 24) காலையில் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் முடிவில், பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது சோலூர் மட்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, கனகராஜ் சேலம் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். தொடக்கத்தில் இந்த வழக்கை சோலூர் மட்டம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், பின்னர் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது, இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த 17ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஆஜராகமுடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதனால், சிபிசிஐடி காவல்துறையினர், ஏப்ரல் 24 ஆம் தேதி வியாழக்கிழமை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு மீண்டும் ஒரு சம்மன் அனுப்பினர்.
அதனை ஏற்ற சயான், இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இந்த நிலையில், அவரிடம் அறியப்படாத இரண்டாவது செல்போன் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின் முடிவில் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.