கோயம்புத்தூர்: விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு வேண்டி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை நேரில் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் எனவும், இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர் காந்தியை சந்தித்து கோரிக்கைகளை பரீசிலனை செய்ய அறிவுறுத்துவேன் எனவும் உறுதியளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்ரல் 19) காலை சேலத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, மாலை கோவையில் நடைபெறும் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த போது, கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் 5 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது, விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு குறித்த கோரிக்கை மனுவினை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்தரனிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன், விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு போரட்டத்திற்கு பாஜக துணை நிற்கும் எனவும் தெரிவித்தார். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தங்களது உடலை வருத்திக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "சட்டப்பேரவையில் இதுகுறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன். அதேபோல், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தியையும் சந்தித்து விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்வேன்" எனவும் உறுதியளித்துள்ளார்.
போராட்டம் கடந்து வந்த பாதை:
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வு பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) இரவு முதல், விசைத்தறி உரிமையாளர்கள் குடும்பத்துடன், சோமனூர் பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சற்று முன்பு, கோயம்புத்தூர் அருகே சோமனூரில் கூலி உயர்வு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதிய கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக போராடி வரும் விசைத்தறி நெசவாளப் பெருமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தேன்.
— Nainar Nagenthiran (@NainarBJP) April 19, 2025
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில்… https://t.co/CJYMZO5s3u pic.twitter.com/WiU3bwESvi
இதற்கிடையே, ஏப்ரல் 17ஆம் தேதி நெசவாளர்கள் ஊதிய உயர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ''விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அரசு இதில் முழு கவனத்தை செலுத்தி வருகிறது. விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,” என்றார்.
இதற்கிடையே, நேற்று (ஏப்ரல் 19) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து 500-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.