"ஓ.பி.சி-க்கு யார் நன்மை செய்கிறார்களோ... அவர்களுக்கே வாக்களியுங்கள்”- நயினார் நாகேந்திரன் பேச்சு!
ஓ.பி.சி பிரிவினருக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுக்கே வரக்கூடிய தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Published : April 11, 2025 at 8:09 AM IST
சென்னை: கிண்டியில் உள்ள ராயல் லீ மெரிடியன் ஓட்டலில் ஓ.பி.சி பிரிவு சார்பில் தமிழ்நாட்டில் ஓ.பி.சி. பிரிவில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் விழா நேற்று (ஏப்ரல் 10) மாலை நடைப்பெற்றது. இந்த விழாவானது ஓ.பி.சி. அணியின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக பாஜக ஓ.பி.சி அணியின் தேசிய தலைவர் லட்சுமணன் எம்பி, மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய நயினார் நகேந்திரன், “ஓ.பி.சி. ஆணையம் 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, காங்கிரஸ் அரசால் நிராகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஓ.பி.சி ஆணையத்திற்கான அங்கீகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தான் கொடுத்தார். ஓ.பி.சி ஆணையத்திற்கு புத்துயிர் தந்தவர் பிரதமர் மோடி.
கச்சதீவை கொடுத்தது யார்? என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், யார் இலங்கைக்கு தாரை வார்த்தனர் என்பதை சொல்ல மறந்து, தற்போது மீட்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். இருந்தாலும், அவர்களின் கச்சதீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தில் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தது.
ஓ.பி.சி பிரிவினர் ஒற்றுமையாக செயல்படவேண்டும். ஓ.பி.சி மக்களுக்கு யார் உதவி செய்கின்றார்களோ? ஓ.பி.சி மக்களை யாரெல்லாம் ஆதரிக்கின்றார்களோ? அவர்களுக்கு வரக்கூடிய தேர்தலில் நம் ஆதரவை தெரிவிக்க வேண்டும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து சிறந்த ஆளுமைகான ஓ.பி.சி. விருதுகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ், சினிமா தயாரிப்பாளர் கலைபுலி தானு, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட 32 பேருக்கு சிறப்பு விருந்தினர்கள் பாஜக ஓ.பி.சி அணியின் தேசிய தலைவர் லட்சுமணன் எம்பி., மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் விருதுகள் வழங்கி கவுரவித்தனர். விருது விழாவிற்கு பின்னர் வெளியே வந்த நயினார் நாகேந்திரனிடம், புதிய தலைவருக்கு வேட்புமனு தாக்கல் செய்வீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

