திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடைப்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய முன்னாள் வங்கி அதிகாரி ராஜாமணி 69 ஆவது வயதில் மரணம் அடைந்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் வித்தியாசமான முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த ராஜாமணி (69) கூடைப்பந்து வீரர் ஆவார். கல்லூரியில் படிக்கும் போது கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டின் கீழ் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணியாற்றினார். வங்கிப் பணியில் இருந்த போதும் அதன் பின்னர் ஓய்வுக்குப் பின்னரும் பல்வேறு இளைஞர்களுக்கு கூடைப்பந்து பயிற்சி அளித்துள்ளார்.
குறிப்பாக நெல்லை சந்திப்பில் உள்ள இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளி, இந்து கல்லூரி ஆகியவற்றில் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூடைப்பந்து பயிற்சி அளித்திருக்கிறார். அதே போல கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் விதத்தில் கூடைபந்து பயிற்சி அளித்துள்ளார். இதனால், நெல்லை மாவட்டத்தில் கூடைப்பந்து பயிற்சியாளர் ராஜாமணி நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதயத்தில் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: திருநங்கைகள் தினச் சிறப்பு கலை நிகழ்ச்சி: திறமையை வெளிப்படுத்தி அசத்தல்!
மரணத்துக்கு முன்பு வரை தினமும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ராஜாமணி கூடைப்பந்து பயிற்சி அளித்து வந்தார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடைப்பந்து வீரர்களுக்கு அவர் பயிற்றுவித்து உள்ளார். அவரிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். தன்னிடம் பயின்ற மாணவர்கள் வெற்றி பெறும் போதெல்லாம் மென்மேலும் அவர்களை ராஜாமணி ஊக்கப்படுத்தி வந்தார்.
மேலும் அவரிடம் கூடைப்பந்து பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் விளையாட்டு இடஒதுக்கீடு பிரிவில் ரயில்வே, பொதுத்துறை வங்கிகள், துறைமுகம், கல்வி, போக்குவரத்து ஆகியவற்றில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு கட்டணம் இன்றி பயிற்சி அளித்துள்ளார்.
இந்த நிலையில் கூடைப்பந்து பயிற்சியாளர் ராஜாமணி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் கூடைபந்து சீருடையுடன், கையில் கூடைப்பந்துடன், ராஜாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தின் முன் மாணவர்கள் கையில் கூடைப்பந்துடன் அணிவகுத்துச் சென்றனர். மாணவர்கள் அஞ்சலி செலுத்திய விதம் ராஜாமணியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்தவர்கள் மத்தியில் நெகிழ்வை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.