சேலம்: ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் வீட்டின் அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, லாரியை வைத்து காரை இடித்து கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.
விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் - அனிதா (36) தம்பதி. இவர்களது வீட்டின் அருகில் வசித்து வருபவர் ரவி - அன்பரசி (40) தம்பதி. இவர்களின் மகன் பூபதி ராஜா. இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி குப்பை கொட்டுவதில் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பூபதி ராஜா, நேற்று முன் தினம் (ஏப்ரல் 20) அவரது நண்பர் பாலமுருகன் என்பவரது மூலமாக, லாரியை எடுத்துக் கொண்டு வந்து அனிதா வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மோதி அதனை சேதப்படுத்தினார். முன்பாக, இந்த சம்பவத்தில், பாலமுருகன் லாரியை வேகமாக ஓட்டி வந்த நிலையில், அதனை தடுக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சித்தார். இதில், அங்கிருந்த அனைவரும் சிதறி அடித்து ஓடினர்.
இதன் பின்னர் காரின் மீது மோதி சேதப்படுத்தி விட்டு லாரியை எடுத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவத்தில் காயமடைந்த அனிதா ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், ஆத்தூர் ஊரக போலீசார், ரவி மனைவி அன்பரசி, அவரது மகன் பூபதி ராஜா, உறவினர்கள் கதிரவன், செல்வி மற்றும் லாரியை ஓட்டி வந்த பூபதி நண்பர் பாலமுருகன் ஆகிய ஐந்து பேர் மீது கொலை முயற்சி, பொது சொத்துக்களை சேதம் அடையச் செய்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ரவி மனைவி அன்பரசி மற்றும் உறவினர் செல்வி ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.