குறைபாடுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் பட்டியல் எங்கே? அண்ணா பல்கலை-க்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை!
பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக வசதி குறைபாடு உடைய பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் கல்வியின் தரமும், எதிர்காலமும் என்ன ஆகும் என்று அறப்போர் இயக்கம் கேள்வியெழுப்பி உள்ளது.


Published : July 16, 2025 at 3:33 PM IST
சென்னை: பேராசிரியர்கள் குறைபாடு மற்றும் ஆய்வக குறைபாடு உடைய தனியார் பொறியியல் கல்லூரிகள் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் உடனே வெளியிட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு, 2025-26 ஆம் ஆண்டுக்கான இணைவு அங்கீகார ஆய்வு சமீபத்தில் நிறைவுற்றது. தனியார் கல்லூரிகளின் குறைபாடுகள் மற்றும் அவற்றின் மோசமான தற்போதைய நிலவரம் பற்றி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரிந்திருக்கும். பொறியியல் கல்லூரிகள் குறைகளை சரி செய்ய ஏற்கனவே அறிவுரை மற்றும் அறிவிப்பு வழங்கிய நிலையில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் வழங்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த ஆண்டு இதே ஜூலையில் (23.7.2024), அறப்போர் இயக்கம், 352 பேராசிரியர்கள் போலியாக, 972 இடங்களில் முழுநேரப் பேராசிரியராக பணிபுரிவதாக கணக்கு காண்பிக்கபட்டு மோசடியாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் பெற்றுள்ளனர் என்றும், இந்த மோசடியில் சுமார் 224 தனியார் பொறியியல் கல்லூரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் வெளிப்படுத்தியிருந்தோம். அதனை தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகம், இன்று வரை, அந்த மோசடியில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீதோ, மோசடியாக அங்கீகார பரிந்துரை செய்த ஆய்வுக்குழு மீதோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டும், பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களின் நிலை மற்றும் ஆய்வகங்களின் நிலை பற்றிய ஆய்வறிக்கை இன்று வரை வெளியிடவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
நடந்து வரும் பொறியியல் கலந்தாய்வில் பங்கு கொள்ளும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு வரும், தாங்கள் சேர விரும்பும் பொறியியல் கல்லூரிகளில், பேராசிரியர்கள் நிலை மற்றும் ஆய்வங்கள் நிலை போன்ற கட்டமைப்பை பற்றி தெரிந்து கொள்வது அடிப்படை உரிமை. அதை உறுதி செய்வது உயர்கல்வித்துறையின் அடிப்படை பொறுப்பு.
இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14 அன்று தொடங்கி, மூன்று சுற்றுகளுக்கு பிறகு, ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைகிறது. அதாவது கலந்தாய்வு 43 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கு பிறகு பொறியியல் கல்லூரிகளின் முதல் ஆண்டு பிரிவு செயல்படத் தொடங்கும். பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக வசதி குறைபாடு உடைய பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் கல்வியின் தரமும், எதிர்காலமும் என்ன ஆகும் என்று அறப்போர் இயக்கம் கேள்வியெழுப்பி உள்ளது.
| இதையும் படிங்க |
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த கால அவகாசமான 45-நாட்களுக்குள் மாணவர்கள் சேர்க்கையே முடிந்து, கல்லூரிகள் இயங்கும் நிலையில், எப்படி கல்லூரிகள் தங்கள் குறைபாடுகளை சரி செய்யும்? என்றும் கேள்வியை முன்வைத்திருக்கும் அறப்போர் இயக்கம், “ஒருவேளை குறைகளை சரி செய்யாத பொறியியல் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க முயன்றால், மாணவர்கள் சேர்க்கையை காரணம் காண்பித்து, தங்கள் மீதான நடவடிக்கையில் இருந்து தப்பித்து கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதற்காகவே அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது போன்று இருக்கிறது.
எனவே, உடனடியாக பொறியியல் கல்லூரிகள் வாரியாக, பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக குறைபாடுகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும், நிபந்தனையுடன் அங்கீகாரம் (Conditional Affiliation) வழங்கப்பட்ட கல்லூரிகள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், சுமார் 2 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் எதிர்காலம் சம்மந்தபட்ட பிரச்சினையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு அக்கறை இல்லை என்பது சமீபத்திய அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

