சென்னை: பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மரியாதை செலுத்தினர்.
ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பெஹல்காமில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுள் ஒருவர் மதுசூதனன் ராவ். இவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளராவார்.
இவர் சுற்றுலாவிற்காக ஜம்மு - காஷ்மீருக்குச் சென்ற போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது அவரது உடல் காஷ்மீரிலிருந்து ஹைதராபாத் வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. அங்கு மதுசூதனன் ராவ் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது உயிரிழந்த மதுசூதனன் ராவ் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மதுசூதனன் ராவ் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, “பயங்கரவாதிகளின் இந்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. பொதுமக்கள் மீதான இந்த தாக்குதல் மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட இயக்கம் தான் காங்கிரஸ் பேரியக்கம். இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போன்றோர் பயங்கரவாதிகளால் தான் கொல்லப்பட்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் வீர மரணம் அடைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு இறுதி மரியாதையும், அவரது குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்தோம். பயங்கரவாதிகளுக்கு மதம், இனம் என்ற அடையாளமே கிடையாது. பயங்கரவாதி என்றால், பயங்கரவாதி தான்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட 'மாநில விலங்கு''; இன்று முதல் 4 நாட்கள் நடக்கும் கணக்கெடுப்பு பணி! |
அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சுற்றுலா சென்ற பயணிகளை இந்துவா? எனக் கேட்டறிந்து சுட்டுக் கொன்றுள்ளனர். இதில் நெல்லூரை சேர்ந்த மதுசூதனன் ராவ் உயிரிழந்துள்ளார். பிரதமர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்று, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்” எனக் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.